
பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் பலி: தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்

பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் பலியான சம்பவம் தொடர்பாக தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சிவகங்கை,
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா பத்தரசன்கோட்டை கிராமத்தை சேர்ந்த கைலாசம் என்பவருடைய மகன் சக்தி சோமையா (வயது 14). சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த பொய்யாவயல் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் கம்ப்யூட்டர் பயிற்சிக்காக பள்ளியில் கம்ப்யூட்டரை இயக்க சுவிட்சை தொட்ட போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சக்தி சோமையா உயிரிழந்தான்.
இந்த சம்பவம் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து மற்றும் கல்வித்துறை அதிகாரிகள், பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் கணேசனை, பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து உத்தரவிட்டார்.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், இதில் அஜாக்கிரதையாக இருந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார். பலியான மாணவனின் குடும்பத்திற்கு, முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சம் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.