< Back
மாநில செய்திகள்
ஆணவத்தில் பேசுகிறார் சேகர்பாபு: அண்ணாமலை
மாநில செய்திகள்

ஆணவத்தில் பேசுகிறார் சேகர்பாபு: அண்ணாமலை

தினத்தந்தி
|
19 Jan 2025 2:32 PM IST

அதிகார மமதையில் ஆடியவர்களுக்கெல்லாம், காலம் பாடம் புகட்டியிருக்கிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னை,

திருச்செந்தூர் முருகன் கோவிலில் சுவாமி தரிசனத்திற்காக பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். இது குறித்து அவர்கள் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், இதனை திருப்பதி கோவிலில் கூட்ட நெரிசலுடன் ஒப்பிட்டு அமைச்சர் சேகர்பாபு பேசியிருந்தார். திருப்பதியில் மட்டும் 24 மணி நேரம் நிற்பான்" என்று அமைச்சர் சேகர்பாபு கூறியிருந்தார். இவரது கருத்துக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்திருக்கின்றன.

இந்தநிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:-

நேற்றைய தினம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், ஆறு மணி நேரத்திற்கும் அதிகமாக, குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட பக்தர்களை, உணவு, தண்ணீர் இன்றி, அடைத்து வைத்திருக்கின்றார்கள். இது குறித்து பக்தர்கள் புகார் தெரிவித்தபோது, "திருப்பதி கோவிலில் மட்டும் 24 மணி நேரம் நிற்பான்" என்று ஒருமையில் அலட்சியமாகப் பதில் அளித்திருக்கிறார் அமைச்சர் சேகர்பாபு.

திருப்பதி கோவிலில் பொதுமக்களுக்கு உணவு, தண்ணீர், கழிப்பறை உள்ளிட்ட போதிய வசதிகள் செய்திருக்கிறார்கள். உங்களைப் போல, கோவில் உண்டியல் பணத்தை முறைகேடாகச் செலவழிப்பதில்லை. கோவிலுக்கு வரும் பக்தர்கள், தங்கள் நேர்மையான உழைப்பில் கிடைக்கும் பணத்தில் சிறு பகுதியை, கோவில்களுக்குக் காணிக்கையாகக் கொடுக்கிறார்கள். உங்களைப் போல, கோவில் பிரசாதத்தில் கமிஷன் அடிப்பதில்லை.

கோபாலபுரம் குடும்பத்திற்கு நெருக்கம் என்ற ஆணவத்தில் பேசிக்கொண்டிருக்கிறார் அமைச்சர் சேகர்பாபு. இதை விட அதிகார மமதையில் ஆடியவர்களுக்கெல்லாம், காலம் பாடம் புகட்டியிருக்கிறது என்பதை அமைச்சருக்கு நினைவுபடுத்துகிறேன்.

காலம் மாறும். தனது ஒவ்வொரு தவற்றுக்கும், அமைச்சர் சேகர்பாபு, ஆண்டவனுக்கும், பொதுமக்களுக்கும் பதில் சொல்லத் தயாராக இருந்து கொள்ளட்டும் என பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்