
செங்கோட்டையன் அதிமுகவுக்கு கடைசி வரை உறுதுணையாக இருப்பார்: கே.பி.முனுசாமி

செங்கோட்டையன் அதிமுகவுக்கு கடைசி வரை உறுதுணையாக இருப்பார் என்று கே.பி.முனுசாமி கூறினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
செங்கோட்டையன் அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர். அரசியலில் மிகப்பெரிய அனுபவம் கொண்டவர்; ஏற்றத் தாழ்வுகளை சந்தித்தவர். ஜெயலலிதா அவருக்கு எந்த அளவுக்கு மதிப்பும், மரியாதையும் அளித்தாரோ, அதே அளவுக்கு எடப்பாடி பழனிசாமியும் அவரை மதிப்புடன் நடத்துகிறார்.
எவ்வளவு சோதனைகள் வந்தாலும் செங்கோட்டையன் இந்த இயக்கத்திற்கு கடைசி வரை உறுதுணையாக இருப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. கட்சியை எதிர்த்து தேர்தல் களத்தில் நிற்கிறார் எதிரிகளுடன் சேர்ந்து எங்களை எதிர்க்கிறார் ஓ.பன்னீர்செல்வம். பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து பேச எந்தவித தகுதியும் தார்மீக உரிமையும் டிடிவி தினகரனுக்கு இல்லை.
விஜய்யை தன் பக்கம் இழுப்பதற்காக அவருக்கு மத்திய பாஜக அரசு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது. பாஜகவின் கடந்தகால வரலாற்றை திரும்பிப் பார்த்தாலே எதற்காக பாதுகாப்பு அளித்துள்ளனர் எனப் புரியும். இவ்வாறு அவர் கூறினார்.