
கோப்புப்படம்
பைக் டாக்சி இயக்குவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்படும் - அமைச்சர் சிவசங்கர்

மத்திய அரசின் விதிகளை பரிசீலித்து பைக் டாக்சி இயக்குவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை,
கிண்டியில் உள்ள போக்குவரத்து ஆணையரக அலுவலகத்தில் ஆட்டோ ஓட்டுனர்கள், கால்டாக்சி ஓட்டுனர்கள் சங்கத்தினருடன் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தொ.மு..ச, சி.ஐ.டி.யு. உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் பங்கேற்றன.
அப்போது பல்வேறு கோரிக்கைகளை போக்குவரத்துத் துறை அமைச்சரிடம் அவர்கள் வலியுறுத்தினர். இது தொடர்பாக முதல்-அமைச்சரிடம் கலந்து பேசி நல்ல முடிவை அறிவிப்பதாக அமைச்சர் சிவசங்கர் கூட்டத்தில் தெரிவித்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர், "சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் (கும்டா) மூலமாக வாடகை வாகனங்களுக்கான செயலியை (ஆப்) செயல்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆட்டோ கட்டணம் தொடர்பாக முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.மஞ்சள் நிற பலகை பொருத்தி உரிய உரிமத்துடன் பைக் டாக்சி இயக்கப்படுவது குறித்து மத்திய அரசின் விதிகளை பரிசீலித்து கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்" என்று அவர் கூறினார்.