< Back
மாநில செய்திகள்
பாம்பன் புதிய ரெயில் பாலம் 28-ந்தேதி திறப்பு.?
மாநில செய்திகள்

பாம்பன் புதிய ரெயில் பாலம் 28-ந்தேதி திறப்பு.?

தினத்தந்தி
|
14 Feb 2025 2:45 PM IST

பாம்பன் புதிய ரெயில் பாலத்தில் தெற்கு ரெயில்வே பொது மேலாளர் இன்று ஆய்வு செய்தார்.

ராமேசுவரம்,

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தையும், ராமேசுவரத்தையும் இணைக்கும் வகையில் பாம்பன் கடலில் ரூ.550 கோடியில் புதிய ரெயில் பாலம் கட்டப்பட்டு உள்ளது. இந்த பாலத்தின் உறுதி தன்மை குறித்து தொடர் ஆய்வுகள் நடை பெற்று வருகின்றன.ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் நடத்திய ஆய்வின் போது கண்டறியப்பட்ட குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டன. தொடர்ந்து இரும்பால் ஆன இணைப்பு பகுதியை செங்குத்தாக மேலே தூக்கி இறக்கி கப்பல்கள், ரெயில்களை இயக்கி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

தற்போது பாலத்தில் இறுதிகட்ட ஆய்வுப்பணிகள் நடைபெற்று வருகின்றன. புதிய ரெயில் பாலத்தை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில், புதிய ரெயில் பாலத்தை ஆய்வு செய்வதற்காக தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் மற்றும் அதிகாரிகள் இன்று காலை மண்டபம் வந்தனர். அங்கிருந்து புதிய ரெயில் பாலத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பாலத்தின் உறுதித்தன்மை, தூக்கு பாலத்தின் தரம் உள்ளிட்டவைகளை இறுதி கட்டமாக ஆய்வு செய்தனர். தொடர்ந்து ராமேசுவரம் ரெயில் நிலையத்திலும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

இதற்கிடையே பாம்பன் புதிய ரெயில் பாலத்தை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி வருகிற 28-ந்தேதி தமிழகம் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பிரதமர் அலுவலகம் மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. திறப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ள நிலையில், மண்டபம் மற்றும் பாம்பனில் அதற்கான ஏற்பாடுகளை ரெயில்வே அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்