< Back
மாநில செய்திகள்
குமரி: கடல் அலையில் சிக்கி மாயமான இளைஞர் சடலமாக மீட்பு
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

குமரி: கடல் அலையில் சிக்கி மாயமான இளைஞர் சடலமாக மீட்பு

தினத்தந்தி
|
24 Feb 2025 12:38 PM IST

குமரியில் தடை செய்யப்பட்ட இடத்தில் நின்று செல்பி எடுத்த இளைஞர், கால் தவறி கடலில் விழுந்தார்.

சேலம் மாவட்டம் மாரமங்கலத்தைச் சேர்ந்த 27 பேர் கொண்ட குழுவினர் நேற்று நாகர்கோவிலில் ஒரு நிகழ்ச்சிக்காக வந்தனர். பின்னர் அவர்கள் கன்னியாகுமரியை சுற்றி பார்க்க புறப்பட்டனர். அங்கு விஜய் (வயது 27) என்ற வாலிபர் உள்பட சிலர் காந்தி மண்டபத்தின் பின்புறம் தடை செய்யப்பட்ட 'மரணப் பாறை' என்று கூறப்படும் இடத்துக்கு சென்றனர்.

உற்சாக மிகுதியில் பாறையில் நின்றபடி விஜய் 'செல்பி' எடுத்து மகிழ்ந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராமல் கால் தவறி கடலில் விழுந்தார். இதனை சற்றும் எதிர்பார்க்காத மற்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் விஜய்யை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர் அலையில் சிக்கி கடலில் மூழ்கினார்.

இதுகுறித்து கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு கடலில் மூழ்கிய வாலிபரை படகு மூலம் தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் தீவிரமாக தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து 2-வது நாளாக அவரை தேடும் பணிகள் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், கடல் அலையில் சிக்கி மாயமான சுற்றுலா பயணி விஜயின் உடல், டவர் அருகே சடலமாக கரை ஒதுங்கியுள்ளது. இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போலீசார், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்