
தி.மு.க. கூட்டணி உடையும் என கூறிய ஜெயக்குமாரின் ஆசை நிறைவேறாது - திருமாவளவன்

அனைத்து கட்சி கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என திருமாவளவன் கூறினார்.
சென்னை,
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், சென்னை வள்ளுவர்கோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;
"ஆங்கிலம் மற்றும் தாய்மொழி என்ற இருமொழிக்கொள்கை இந்தியா முழுவதும் போதுமானது. அரசே ஒரு மொழியை திணிப்பது எதிர்காலத்தில் ஒரே தேசம் ஒரே மொழியை உருவாக்குவதற்கான சதி, சூழ்ச்சி. சூழ்ச்சியை முறியடிக்க மும்மொழிக்கொள்கையை எதிர்க்கிறோம்.
தி.மு.க. கூட்டணி உடையும் என்பது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அது நிறைவேறாது என அவருக்கே தெரியும். ஜெயக்குமாரின் ஆசை நிறைவேறாது. தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி குறித்து பேசுவோம், மற்ற நேரங்களில் மக்கள் பிரச்சனைக்காக பேசுவோம், போராடுவோம்.
வரும் 5-ந்தேதி நடைபெற உள்ள அனைத்து கட்சி கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அனைத்து கட்சி கூட்டத்தை மறுக்கிற கட்சியினரின் கருத்து ஏற்புடையதாக இல்லை. இந்தியை படிக்க வேண்டும் என பா.ஜ.க.விற்கு ஆதரவாக பேசுவது அவர்களின் அரசியல் ஆதாயத்திற்கானது."
இவ்வாறு அவர் கூறினார்.