
கல்லூரி மாணவிகளிடம் தவறாக நடந்த ஊர்க்காவல்படை வீரர் கைது

கல்லூரி மாணவிகளிடம் தவறாக நடந்த ஊர்க்காவல்படை வீரர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூரு சதாசிவநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட எம்.எஸ்.ராமையா நகரில் கல்லூரி மாணவி ஒருவர் தனது தோழிகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். கடந்த 25-ந் தேதி மாணவியின் வீட்டுக்கு தோழி ஒருவா் சென்றிருந்தார். அவரும் கல்லூரி மாணவிதான். அவருடன் மாணவி பேசி கொண்டிருந்தார்.
அப்போது அவர்களது வீட்டுக்குள் நுழைந்த ஒருவர், மாணவிகளிடம் ஆபாசமாக சைகை காட்டியுள்ளார். மேலும் அவர்களை மிரட்டி ரூ.5 ஆயிரத்தை பறித்து சென்றுள்ளார். இதுகுறித்து அந்த மாணவிகளின் தோழிகள் கொடுத்த புகாரின் பேரில் சதாசிவநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
மேலும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து மர்மநபரை தேடி வந்தனர். இந்தநிலையில் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறி ஊர்க்காவல்படை வீரரான சுரேஷ் குமார் (வயது 40) என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.