< Back
தமிழக செய்திகள்
ஜெயலலிதா பிறந்தநாளில் ஏழை, எளியோருக்கு உதவிடுங்கள்: கட்சியினருக்கு அதிமுக வேண்டுகோள்
தமிழக செய்திகள்

ஜெயலலிதா பிறந்தநாளில் ஏழை, எளியோருக்கு உதவிடுங்கள்: கட்சியினருக்கு அதிமுக வேண்டுகோள்

தினத்தந்தி
|
20 Feb 2025 2:53 PM IST

ஜெயலலிதா பிறந்தநாளில் மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் அவர்களுக்கான கல்வி உபகரணங்களை வாங்கி கொடுக்குமாறு, கட்சியினரை அதிமுக கேட்டுக்கொண்டுள்ளது.

சென்னை,

ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, ஏழை, எளியோருக்கு உதவிடுமாறு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு அதிமுக வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது;

"ஜெயலலிதாவின் 77-ஆவது பிறந்த நாளான 24.2.2025 – திங்கட் கிழமை காலை 10 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலை, எம்.ஜி.ஆர். மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள, ஜெயலலிதாவின் திருவுருவச் சிலைக்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி மு.பழனிசாமி மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி, கழகக் கொடியினை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கி, ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா சிறப்பு மலரை'' வெளியிட உள்ளார். அதனைத் தொடர்ந்து, தலைமைக் கழகச் செயலாளர்கள் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளனர்.

இந்நிகழ்ச்சியில், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ஜெயலலிதா, தனது பிறந்த நாளையொட்டி, ``ஆடம்பர விழாக்களைத் தவிர்த்து, கட்சியினர், அவரவர் சக்திக்கேற்ப ஏழை-எளிய மக்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்தால், அந்நிகழ்வுகள் பயன்பெறுவோரையும் மகிழ்விக்கும்; இம்மண்ணில் தமிழக மக்களுக்காக உழைத்திடும் பெருவாய்ப்பு பெற்ற என்னையும் அது மேலும் உற்சாகப்படுத்தும்'' என்றும்; ``எளிமையோடும், எளியோருக்கு உதவிடும் நல்ல நோக்கத்தோடும் நடத்தப்படும் நிகழ்ச்சிகள் மூலம் கட்சியினரால் பயன்பெறும் வறியவர்களின் முகத்தில் படரும் புன்னகை ஒன்றே நம்மையும், நம் ஒப்பில்லா இயக்கத்தையும் ஆராதிக்கின்ற நிகழ்வாக அமையும் என்பதை கட்சியினர் உணர்ந்து செயல்பட வேண்டும்'' என்றும் ஜெயலலிதா நமக்கெல்லாம் ஏற்கெனவே அறிவுறுத்தி உள்ளார்கள்.

அதன்படி, ஜெயலலிதாவின் பிறந்த நாளான 24.2.2025 அன்று, அவரின் நினைவுகளை நெஞ்சில் சுமந்துள்ள மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளை, வார்டு; மாநகராட்சிப் பகுதி, வட்ட அளவில் ஆங்காங்கே கம்பீரமாக வீற்றிருக்கும் கழக கொடிக் கம்பங்களுக்கு புதுவர்ணம் பூசியும்; கொடிக் கம்பங்கள் இல்லாத இடங்களில் புதிய கொடிக் கம்பங்களை அமைத்து கழகக் கொடியினை ஏற்றி வைத்தும்; தத்தமது பகுதிகளில் ஆங்காங்கே ஜெயலலிதாவின் திருவுருவச் சிலைகளுக்கும், அவரது படங்களுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு கேட்டுக்கொள்வதோடு, கண் தானம், ரத்த தானம் செய்தல், மருத்துவ முகாம் நடத்துதல், கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி, விளையாட்டுப் போட்டிகளை நடத்துதல்; மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் அவர்களுக்கான கல்வி உபகரணங்களை வழங்குதல், ஏழை, எளியோருக்கு அன்னதானம் வழங்குதல், இலவச திருமணங்களை நடத்தி வைத்தல், ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் முதியோர் இல்லங்களில் வசிப்பவர்களுக்கு அறுசுவை உணவு வழங்குதல், வேஷ்டி, சேலை வழங்குதல் உள்ளிட்ட மக்கள் மனம் குளிரும் வகையிலான நலத் திட்ட உதவிகளை வழங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்."

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்