
மின்சார ரெயில்கள் ரத்து - சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே நாளை மாலை வரை மின்சார ரெயில் நிறுத்தப்படுகிறது.
சென்னை,
சென்னை -கடற்கரை மற்றும் எழும்பூர் இடையேயான 4-வது ரெயில் பாதை அமைக்கும் பணி காரணமாக, நாளை காலை 5:10 மணி முதல் மாலை 4:10 மணி வரை கடற்கரை - எழும்பூர் இடையே இயக்கப்படும் புறநகர் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. மேலும் தாம்பரம் - கோடம்பாக்கம் - தாம்பரம் இடையே ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் பயணிகள் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு/காஞ்சிபுரம்/திருமால்பூர்/அரக்கோணம் ஆகிய இடங்களில் இருந்து இயக்கப்படும் மின்சார ரயில்கள் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே காலை 05:10 மணி முதல் மாலை 4:10 மணி வரை பகுதியளவு ரத்து செய்யப்படுகின்றன. நான்காவது ரயில் பாதை அமைக்கும் பணிகளுக்கு பின்னர், ஞாயிற்றுக்கிழமை மாலை 4:10 மணி முதல் மின்சார ரயில் சேவைகள் வழக்கம் போல் மீண்டும் தொடங்கும் என சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், மின்சார ரெயில் ரத்து காரணமாக, போக்குவரத்து கழகம் சார்பில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதன்படி, பிராட்வே - தாம்பரம் இடையே 25 சிறப்பு பேருந்துகளும், பிராட்வே - கிளாம்பாக்கம் இடையே 20 சிறப்பு பேருந்துகளும் பல்லாவரம் - செங்கல்பட்டு இடையே 5 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.