
ராமநாதபுரம்
ராமேஸ்வரம் கோவிலில் கூட்டநெரிசலில் சிக்கி வடமாநில பக்தர் உயிரிழப்பு

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் கூட்டநெரிசலில் சிக்கி வடமாநில பக்தரான ராஜ்தாஸ் என்பவர் உயிரிழந்தார்.
ராமேஸ்வரம்,
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் பிரசித்தி பெற்ற ராமநாத சுவாமி கோவில் உள்ளது. திருக்கோவிலுக்கு நாள்தோறும் பல்வேறு மாவட்ட மற்றும் மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில் ராமநாதசுவாமி திருக்கோவிலில் சாமி தரிசனத்திற்காக வந்த வட மாநில பக்தர் கூட்ட ஒருவர் நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இன்று அதிகாலை ஸ்படி லிங்கம் தரிசனம் செய்வதற்காக ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ராஜ் தாஸ் என்ற சன்னியாசி பக்தர் வரிசையில் நின்றிருந்தபோது கூட்டு நெரிசலில் சிக்கி திடீரென மயங்கி விழுந்தார்.
அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருக்கோவில் அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், ராஜ் தாஸ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து அவரது உடலை உடற்கூறு ஆய்வு செய்வதற்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.