
சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்களின் திடீர் போராட்டத்தால் பரபரப்பு

சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் விடுதி மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை,
சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள மாநிலக் கல்லூரியில், ஏராளமான மாணவர்கள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில், விடுதி மாணவர்கள் நள்ளிரவில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விடுதியில் வழங்கப்படும் உணவு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் சரியில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டினர். மேலும், சமையலறை கான்ட்ராக்டரை மாற்ற வேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைத்தும் கல்லூரி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி சுமார் 200-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்லூரி முதல்வர் நேரில் வர வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் வலியுறுத்தினர். இதனிடையே, இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.