தமிழக பட்ஜெட் 2025-26 : கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும்- தங்கம் தென்னரசு

தமிழக பட்ஜெட் 2025-26 -ல் வெளியாகும் அறிவிப்புகளை உடனுக்கு உடன் இங்கே அறிந்து கொள்ளலாம்.
Live Updates
- 14 March 2025 12:32 PM IST
அடுத்த 2 ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப டேப் அல்லது லேப்டாப் வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
- 14 March 2025 12:18 PM IST
பட்ஜெட் உரையை காலை 9.32 மணிக்கு துவங்கிய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, நண்பகல் 12.10 மணி வரை வாசித்தார். கிட்டத்தட்ட 2 மணி நேரம் 38 நிமிடங்கள் பட்ஜெட் உரையை நிகழ்த்தினார்.
- 14 March 2025 12:11 PM IST
கொரோனா பெருந்தொற்று பரவி இருந்த காலத்தில் தமிழ்நாடு அரசின் நிதிநிலையின் மீது ஏற்பட்ட பெருஞ்சுமை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அரசு அலுவலருக்கான ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் நடைமுறையை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். அவற்றைக் கனிவுடன் பரிசீலித்து முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஈட்டிய விடுப்பு நாட்களில் 15 நாட்கள் வரை, 01-04-2026 முதல் சரண் செய்து பணப்பலன் பெறுவதற்கான நடைமுறை மீண்டும் செயல்படுத்தப்படும். இதற்குரிய அரசாணைகள் விரைவில் பிறப்பிக்கப்படும். அரசு அலுவலர் நலன் காக்கும் இந்த அறிவிப்பின் மூலம் சுமார் ஒன்பது லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள்.- பட்ஜெட்டில் அறிவிப்பு
- 14 March 2025 11:59 AM IST
ஏற்றத்தாழ்வற்ற, சமத்துவ சமுதாயத்தை உருவாக்கும் உயரிய நோக்குடன். சொந்த வீடற்ற / நிலமற்ற ஏழைக் குடும்பங்களுக்கு விலையின்றி வீட்டு மனைப் பட்டா வழங்குவதை அரசு தன் முன்னுரிமைக் கொள்கையாகக் கொண்டுள்ளது. இதுவரை 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வீட்டுமனைப் பட்டாக்கள் மாநிலம் முழுவதும் பல்வேறு பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 5 லட்சம் பட்டாக்கள் இந்த ஆண்டு வழங்கப்படும்- தங்கம் தென்னரசு
- 14 March 2025 11:40 AM IST
திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை ரூ.2,100 கோடியில் உயர்மட்ட நான்கு வழிச்சாலை அமைக்கப்படும் என தங்கம் தென்னரசு அறிவிப்பு
- 14 March 2025 11:33 AM IST
பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு 18 வயது வரை மாதம் ரூ.2 ஆயிரம் நிதி உதவி
மிகவும் வறிய நிலையில் உள்ள சுமார் 50,000 குடும்பங்களில் குழந்தைகள் தங்களின் இரண்டு பெற்றோரையும் இழந்து தங்களது உறவினர்களின் பாதுகாப்பில் வளர்ந்து வருவது தெரியவந்துள்ளது. இக்குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில் குழந்தைகளின் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு வரை இடைநிற்றல் இன்றி அவர்கள் கல்வியை தொடர மாதம் 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். பள்ளிப்படிப்பு முடித்தவுடன் கல்லூரிக் கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் அவர்களுக்கு வழங்கிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்- தங்கம் தென்னரசு
- 14 March 2025 11:28 AM IST
84 திருக்கோவில்களில் திருக்குளங்களைச் சீரமைக்க 72 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்துசமய அறநிலையத் துறையின் பதிப்பகத் துறை மூலமாக 216 க்கும் மேற்பட்ட அரிய நூல்கள் மறுபதிப்பு செய்து வெளியிடப்பட்டுள்ளன. 2025-26 ஆம் நிதியாண்டில், ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த திருக்கோவில்களில் திருப்பணிகள் செய்திட 125 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது- பட்ஜெட்டில் அறிவிப்பு
- 14 March 2025 11:17 AM IST
தாம்பரம் முதல் வேளச்சேரி வழியாக கிண்டி வரை 21 கி.மீ. தூரத்திற்கும். கலங்கரை விளக்கத்திலிருந்து உயர் நீதிமன்றம் வரை 6 கி.மீ. தூரத்திற்கும் மெட்ரோ இரயில் வழித்தடம் நீட்டிப்பு செய்வதற்கான விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்படும்- பட்ஜெட்டில் அறிவிப்பு