
தனியார் கல்லூரிகளில் செட், நெட் தேர்வுகளில் தேர்ச்சி பெறாதவர்கள் பணிபுரிந்தால் நடவடிக்கை- அமைச்சர் கோவி.செழியன்

தனியார் கல்லூரிகளில் செட், நெட் தேர்வுகளில் தேர்ச்சி பெறாதவர்கள் பணிபுரிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கோவி.செழியன் கூறினார்.
கடலூர்,
கடலூருக்கு வருகை தந்த உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியனிடம், தமிழகத்தில் தனியார் கல்லூரிகளில் செட், நெட் தேர்வுகளில் தேர்ச்சி பெறாதவர்களை குறைந்த ஊதியம் கொடுத்து பணி நியமனம் செய்துள்ளதாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.அதற்கு அவர் பதில் அளிக்கையில், தனியார் கல்லூரிகளில் ஏற்கனவே செட், நெட் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர்களாக பணியாற்ற வேண்டும் என்ற நெறிமுறை உள்ளது.
ஆங்காங்கே இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். இதுகுறித்து பல கல்லூரிகளில் சென்று ஆய்வு செய்து, தேர்ச்சி பெறாதவர்கள் பணிபுரிகிறார்கள் என்ற உண்மை தெரிந்தால் தக்க நடவடிக்கை எடுத்து இருக்கிறோம்.உயர் கல்வியை உச்ச நிலைக்கு கொண்டு செல்ல பெரும் முயற்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு இருக்கிறார். அதில் வெற்றி காணுவோம்.
அடுத்த மாதம் (மார்ச்) பல ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த உதவி பேராசிரியர் பணிக்கான மாநில தகுதித்தேர்வு (செட்) தேதி அறிவிக்கப்பட்டு, அட்டவணை வெளியிட்டுள்ளோம். ஆகவே உயர்கல்வியில் மிகுந்த அக்கறையோடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார் என்றார்.