
தஞ்சாவூர்
பலூனை விழுங்கிய 7 மாத குழந்தை: மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சோகம்

7 மாத ஆண் குழந்தை மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர்,
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே திருவோணம் தாலுகா ஊரணிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (35). இவரது மனைவி சிவகாமி (30). இவர்களது 7 மாத ஆண் குழந்தைக்கு நேற்றுமுன்தினம் திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது.
உடனடியாக பெற்றோர் குழந்தையை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
குழந்தை உடலை சொந்த ஊருக்கு கொண்டு வந்தவர்கள், சந்தேகத்தின் பேரில் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு நேற்று கொண்டு சென்றனர். பிரேத பரிசோதனை செய்த போது குழந்தையின் வயிற்றில் பலூன் இருந்தது தெரியவந்தது. அதை அகற்றிய டாக்டர்கள், பலூனை விழுங்கியதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு குழந்தை இறந்ததாக தெரிவித்தனர்.
இதுகுறித்து திருவோணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தை பலுானை விழுங்கியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.