
தமிழகத்தில் 2,045 ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டிடம்: அமைச்சர் பெரியகருப்பன்

தமிழகத்தில் 2,045 ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டிடம் கட்டப்பட்டு வருவதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக சட்டசபையில் இன்றைய கேள்வி நேரத்தின்போது துணை சபாநாயகர் பிச்சாண்டி, கீழ் பென்னாத்தூர் தொகுதிக்குட்பட்ட துணை கிராமங்களில் நியாய விலைக்கடைகள் இல்லாத காரணத்தில் 2 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள கடைகளுக்கு சென்று அத்தியாவசியப் பொருட்களை வாங்க வேண்டிய சூழல் இருப்பதாகவும் கீழ் பென்னாத்தூர் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் உள்ள துணைக் கிராமங்களில் பகுதிநேர நியாயவிலைக்கடைகள் அமைக்க அரசு முன்வர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
அதற்கு பதிலளித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் பேசியதாவது, நியாய விலைக்கடைகளை தொடங்க அரசு வகுத்துள்ள விதிகளின் அடிப்படையில் செயல்படுவதாகவும், திமுக ஆட்சியமைந்த பின் இதுவரை 3 ஆயிரத்திற்கும் அதிகமான நியாய விலைக்கடைகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் துணை சபாநாயகர் பிச்சாண்டியின் கோரிக்கையும் பரிசீலிக்கப்படும் என தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து சேதுபாவாசத்திரம், கொளக்குடி ஊராட்சியில் முழுநேர நியாயவிலை கடைக்கு கட்டிடம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் கேள்வி எழுப்பினார்.
இதில் பதில் அளித்த அமைச்சர் பெரிகருப்பன், தமிழகத்தில் உள்ள 34,902 ரேசன் கடைகளில், 6,218 ரேசன் கடைகள் தனியார் மற்றும் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இதில் 2,545 கடைகளுக்கு சொந்த கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அனைத்து கடைகளுக்கும் சொந்தக் கட்டிடம் கட்டும் பணி மேற்கொள்ளப்படும் என்று பதில் அளித்தார்.