< Back
மாநில செய்திகள்
கூவம் மறுசீரமைப்பு குறித்து வெள்ளை அறிக்கை - மேயர் பிரியாவுக்கு கார்த்தி சிதம்பரம் எம்.பி. கடிதம்
மாநில செய்திகள்

கூவம் மறுசீரமைப்பு குறித்து வெள்ளை அறிக்கை - மேயர் பிரியாவுக்கு கார்த்தி சிதம்பரம் எம்.பி. கடிதம்

தினத்தந்தி
|
1 Sep 2024 4:17 AM GMT

கூவம் ஆறு மறுசீரமைப்பு திட்டம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என மேயர் பிரியாவுக்கு கார்த்தி சிதம்பரம் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை,

கூவம் ஆறு மறுசீரமைப்பு திட்டம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவுக்கு காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது;-

"கூவம் நதியை சீரமைக்க மாநில அரசு ரூ.750 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில், ஏற்கனவே ரூ.329 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் தற்போதைய சவால்கள், ஆற்றின் நிலை, திட்டமிடப்பட்ட மற்றும் உண்மையான விளைவுகளுக்கு இடையே உள்ள முரண்பாடுகள் பற்றி தெரிவிக்க வேண்டும்.

சென்னை நீர்நிலைகளில் தினமும் விடக்கூடிய சுத்திகரிக்கப்படாத கழிவுநீரில் கிட்டத்தட்ட 30 சதவீதம் கூவம் ஆற்றிலும், 60 சதவீதம் பக்கிங்காம் கால்வாயிலும், மீதம் உள்ளவை அடையாறு ஆற்றிலும் கலக்கின்றன. நீர்நிலைகளின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு இல்லாததால், இந்த ஆறுகளில் திடக்கழிவு மற்றும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் ஆகியவை தினந்தோறும் வெளியேற்றப்படுகின்றன.

எனவே, அடையாறு சிற்றோடையின் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு, அடையாறு சிற்றோடையின் முகத்துவார மறுசீரமைப்பு மற்றும் கூவம் ஆறு மறுசீரமைப்பு ஆகிய திட்டங்களின் தற்போதைய நிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்."

இவ்வாறு தனது கடிதத்தில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்