< Back
மாநில செய்திகள்
தமிழகத்தில் பா.ஜனதா இரட்டை இலக்கத்தில் வெற்றி பெறும்:  மத்திய மந்திரி எல்.முருகன்
மாநில செய்திகள்

தமிழகத்தில் பா.ஜனதா இரட்டை இலக்கத்தில் வெற்றி பெறும்: மத்திய மந்திரி எல்.முருகன்

தினத்தந்தி
|
1 Jun 2024 4:22 PM GMT

நாடாளுமன்ற தேர்தலில் 100 சீட்டை தாண்டமாட்டார்கள். காங்கிரஸ் இந்தியா கூட்டணியின் தோல்வி உறுதி என்று மதுரையில் மத்திய மந்திரி முருகன் தெரிவித்தார்.

மதுரை,

மதுரையில் மத்திய மந்திரி எல்.முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பிரதமர் மோடி சிறுவயதில் இருந்தே ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவர். கடந்த ஆண்டு கூட தேர்தல் முடிந்த பிறகு இமயமலையில் தியானம் செய்தார். தற்போது 3 நாட்களாக கன்னியாகுமரியில் கடும் தவத்தை மேற்கொண்டு வருகிறார். முனிவர் போல தவம் செய்து வருகிறார்.

காங்கிரஸ் இந்தியா கூட்டணியின் தோல்வி உறுதி செய்யப்பட்டு விட்டது. காங்கிரஸ் கூட்டணி 100 சீட் கூட தாண்டாது. அரவிந்த் கெஜ்ரிவால் நாளை ஜெயிலுக்கு போகிறார். தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்தியா கூட்டணி கூட்டத்திற்கு செல்லவில்லை என்ற தகவல் வருகிறது. காங்கிரஸ் கூட்டணியால் எந்த பிரயோஜனமும் இல்லை.

நடிகர் பிரகாஷ்ராஜுக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன சம்பந்தம்? பிரகாஷ்ராஜ் ஒரு நடிகர். கர்நாடகா நடிகர் அவ்வளவு தான். அவருடைய கருத்துகளை நாம் இங்கே பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. தமிழ்நாட்டில் பா.ஜனதா வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெறும். இரட்டை இலக்க நாடாளுமன்ற உறுப்பினர்களை பிரதமர் நரேந்திர மோடிக்கு சமர்ப்பிக்க இருக்கிறோம்.

பாரதிய ஜனதா கட்சிக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் மக்கள் ஒரு பெரிய ஆதரவை கொடுத்துக் கொண்டிருப்பதை இந்தியா முழுவதும் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை நடத்த இருக்கிறார்.

இந்தியா முழுவதும் எங்கு பார்த்தாலும், எங்கு சென்றாலும் மக்கள் மோடி, மோடி என்று பெரிய ஆதரவு அலைகளை கொடுக்கிறார்கள். நம் தேசத்தை வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் சென்ற மோடியை மக்கள் பாராட்டுகிறார்கள். மூன்றாவது முறையாக மோடியின் ஆட்சி, 400 தொகுதிகளில் வெற்றி பெறுவது நிச்சயிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்