< Back
மாநில செய்திகள்
2026 தேர்தலில் வெற்றி கனியை பறிக்க  உழைப்போம் - பிரேமலதா விஜயகாந்த்
மாநில செய்திகள்

தோல்வியை படிக்கல்லாக மாற்றி 2026 தேர்தலில் வெற்றி கனியை பறிக்க உழைப்போம் - பிரேமலதா விஜயகாந்த்

தினத்தந்தி
|
5 Jun 2024 10:07 AM GMT

தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜம் என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

விருதுநகர்,

2024 மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி நடந்து முடிந்த நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது, இந்நிலையில் விருதுநகர் தொகுதியில் தே.மு.தி.க. சார்பாக அ.தி.மு.க. கூட்டணியில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் போட்டியிட்டார்.

மேலும் அதே தொகுதியில் என்டிஏ கூட்டணி சார்பாக ராதிகா சரத்குமார் ,இந்தியா கூட்டணி சார்பாக திமுக வேட்பாளர் மாணிக்கம் தாகூர் ஆகியோரும் போட்டியிட்டனர். நேற்று வாக்கு எண்ணிக்கையில் சில மணி நேரங்களில் விஜய பிரபாகரன் முன்னிலை வகித்து வந்த நிலையில் இவர்தான் வெற்றி வாய்ப்பை சூடுவார் என பலரும் எதிர்பார்த்தனர்.

தே.மு.தி.க. வேட்பாளர் விஜய பிரபாகரன் 4321 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளார். இவர் மொத்தம் மூன்று லட்சத்து 80 ஆயிரத்து 877 வாக்குகள் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், விருதுநகர் தொகுதியில் தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வாக்களி்த்த மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பேசியதாவது:-

தே.மு.தி.கவுக்கு வாக்களித்த மக்களுக்கும், கடுமையாக உழைத்த நிர்வாகிகள், தொண்டர்களுக்கும் நன்றி. பல சவால்களை எதிர்த்து, அசைக்க முடியாத சக்தியாக இந்த கூட்டணியை மாற்றிய தொண்டர்களுக்கு நன்றி. தேர்தலில் வெற்றி, தோல்வி சகஜம்.

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.கடைசி வரை வீரமாக போராடி சரித்திரம் படைத்துள்ளோம்.ஒருகோடிக்கு மேல் வாக்குகள் பெற்று அசைக்க முடியாத சக்தியாக கூட்டணியை மாற்றிய அனைவருக்கும் நன்றி. தோல்வியை படிக்கல்லாக மாற்றி 2026 தேர்தலில் வெற்றி கனியை பறிக்க கடுமையாக உழைப்போம்.2026 சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க பெரிய வெற்றியை பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்