< Back
மாநில செய்திகள்
உல்லாசத்திற்கு வீட்டுக்கு அழைத்த இளம்பெண்... நம்பி சென்ற ஆசிரியருக்கு நேர்ந்த கொடூரம்
மாநில செய்திகள்

உல்லாசத்திற்கு வீட்டுக்கு அழைத்த இளம்பெண்... நம்பி சென்ற ஆசிரியருக்கு நேர்ந்த கொடூரம்

தினத்தந்தி
|
4 Jun 2024 1:17 AM GMT

ஆசிரியர் விக்டரின் உடல் சாக்கு மூட்டையில் எலும்புக்கூடாக கிடந்தது.

கடலூர்,

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தை சேர்ந்தவர் குழந்தைசாமி மகன் விக்டர் (வயது 49). இவர் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து கடந்த 8 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தார். கடந்த 6 ஆண்டுகளாக கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள தனியார் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இதற்காக அவர் அதே பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்தார்.

கடந்த மாதம் 18-ந்தேதி கடைக்கு செல்வதாக அவருடன் தங்கி இருந்த சக ஆசிரியர் ஒருவரிடம் கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றார். அதன்பின்னர் அவர் திரும்பி வரவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுபற்றி அவரது தாய் பாத்திமாமேரி திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான விக்டரை தேடி வந்தனர்.

இதற்கிடையில், காணாமல் போன விக்டர் குறிஞ்சிப்பாடி பகுதியை சேர்ந்த 21 வயது பட்டதாரியான ஜனனி என்ற இளம்பெண்ணிடம் அடிக்கடி செல்போனில் பேசி வந்தது தெரியவந்தது. அவரை பிடித்து விசாரிக்க போலீசார் முடிவு செய்திருந்த நிலையில் ஜனனி, அண்ணன் முறை கொண்ட தனது உறவினரான தட்சிணாமூர்த்தி (22) என்பவருடன் திருப்பாதிரிப்புலியூர் கிராம நிர்வாக அலுவலர் உசேனிடம் சென்று விக்டரை கொலை செய்ததாக கூறி சரண் அடைந்தார். இருவரையும் அவர் போலீசில் ஒப்படைத்தார். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

அதன் விவரம் வருமாறு:-

விக்டருக்கும், அரியலூர் மாவட்டத்தை சோ்ந்த ஜனனிக்கும் பழக்கம் இருந்துள்ளது. ஏழ்மையில் இருந்த இளம்பெண்ணின் குடும்பத்திற்கு விக்டர் பண உதவி செய்து வந்துள்ளார். இந்த நிலையில் ஜனனி தனது குடும்பத்துடன் குறிஞ்சிப்பாடி பகுதியில் குடியேறியுள்ளார். அங்கும் இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர்.

இந்த நேரத்தில் ஜனனிக்கு வேறு ஒரு வாலிபருடன் திருமண நிச்சயதார்த்த ஏற்பாடு நடந்தது. இதையறிந்த விக்டர், நீ திருமணம் செய்யக்கூடாது. இல்லையெனில் உன்னுடன் உல்லாசமாக இருந்ததை வெளியே கூறிவிடுவேன் என இளம்பெண்ணை மிரட்டியுள்ளார்.

இதனால் பயந்துபோன ஜனனி இதுபற்றி தட்சிணாமூர்த்தியிடம் கூறினார். அவர், ஜனனியுடன் சேர்ந்து விக்டரை கொலை செய்ய திட்டம் தீட்டினார். அதன்படி சம்பவத்தன்று ஜனனி விக்டரை தனது வீட்டுக்கு அழைத்துள்ளார். சதிச்செயலை அறியாத விக்டர் அங்கு சென்றார்.ஜனனியின் வீட்டில் 2 பேரும் தனிமையில் இருந்தனர். அப்போது, அங்கு தயாராக இருந்த தட்சிணாமூர்த்தி இரும்பு கம்பியால் விக்டரை அடித்துக்கொலை செய்ததாக தெரிகிறது.

பின்னர் அவரது உடலை 2 பேரும் சேர்ந்து சாக்கு மூட்டையில் கட்டி மோட்டார் சைக்கிளில் எடுத்துச்சென்று நெய்வேலி வேலுடையான்பட்டு பகுதியில் முட்புதரில் வீசிவிட்டு எதுவும் தெரியாததுபோல் வந்துவிட்டது தெரிந்தது. இதையடுத்து தட்சிணாமூர்த்தி, விக்டரின் உடலை வீசிய இடத்தை நேற்று போலீசாருக்கு அடையாளம் காட்டினார்.

அங்கு விக்டரின் உடல் சாக்கு மூட்டையில் எலும்புக்கூடாக கிடந்தது. அதை கைப்பற்றிய போலீசார், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, போலீசார், விக்டர் காணாமல் போனதாக பதிவு செய்த வழக்கை, கொலை வழக்காக மாற்றி தட்சிணாமூர்த்தி, ஜனனி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரபை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்