< Back
மாநில செய்திகள்
மனைவி பிரிந்து சென்றதால் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை
மாநில செய்திகள்

மனைவி பிரிந்து சென்றதால் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
20 Jun 2024 12:55 PM GMT

குடும்ப பிரச்சினை காரணமாக பாபுக்கும், அவரது மனைவிக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தேனி,

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே உள்ள பொன்னன்படுகை கிராமத்தை சேர்ந்தவர் பாபு (வயது 39). இவர், சென்னை கொருக்குப்பேட்டை போலீஸ்நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார். அவருடைய மனைவி ஜெயபாரதி. இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

சென்னையில், பாபு மட்டும் தங்கியிருந்து வேலை செய்து வந்தார். ஆனால் அவரது குடும்பத்தினர் பொன்னன்படுகையில் வசித்து வந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மஞ்சள்காமாலையால் பாபு பாதிக்கப்பட்டார். இதற்காக அவர் சித்த மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு குடும்ப பிரச்சினை காரணமாக பாபுக்கும், அவரது மனைவிக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஜெயபாரதி கோபித்து கொண்டு தனது குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறினார். தற்போது அவர், குமணன்தொழுவில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.

சென்னையில் இருந்து விடுப்பு எடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு பொன்னன்படுகைக்கு பாபு வந்திருந்தார். அப்போது மஞ்சள்காமாலை நோயால் அவர் சாப்பிட முடியாமல் அவதிப்பட்டதாக தெரிகிறது. நோய் பாதிப்பு மற்றும் மனைவி பிரிந்து சென்றதால் பாபு மனவேதனையில் இருந்தார்.

இந்தநிலையில் நேற்று காலையில் அவருடைய வீட்டின் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்தது. இதை பார்த்து சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் பாபுவின் வீட்டுக்கு சென்று கதவை தட்டினர். ஆனால் அவர் கதவை திறக்கவில்லை. கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதுகுறித்து மயிலாடும்பாறை போலீசாருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பின்னர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு தூக்குப்போட்டு பாபு பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நோய் பாதிப்பு மற்றும் மனைவி பிரிந்து சென்றதால் போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்