< Back
மாநில செய்திகள்
பாரா ஒலிம்பிக் பேட்மிண்டன்: பதக்கம் வென்ற துளசிமதி, மனிஷாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
மாநில செய்திகள்

பாரா ஒலிம்பிக் பேட்மிண்டன்: பதக்கம் வென்ற துளசிமதி, மனிஷாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தினத்தந்தி
|
2 Sep 2024 5:30 PM GMT

பாரா ஒலிம்பிக் பேட்மிண்டனில் வெள்ளி, வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனைகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இந்த தொடரில் பேட்மிண்டன் விளையாட்டில், பெண்கள் ஒற்றையர் எஸ்.யு. 5 பிரிவின் இறுதிப்போட்டி மற்றும் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டி இன்று நடைபெற்றது.

இதில் இறுதிப்போட்டியில் இந்தியாவின் துளசிமதி முருகேசன், சீனாவின் க்யு ஹ்யா யங்கிடம் தோல்வி கண்டு வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். வெற்றி பெற்ற க்யு ஹ்யா யங் தங்கப் பதக்கம் வென்றார். இதே பிரிவில் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்தியாவின் மனிஷா ராமதாஸ், டென்மார்க்கின் கேத்ரின் ரோசன்கிரெனை வீழ்த்தி வெண்கலப்பதக்கத்தை வென்றார்.

இந்த நிலையில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைகள் துளசி முருகேசன் மற்றும் மனிஷா ராமதாசுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "பாரா ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற துளசிமதி முருகேசனுக்கு வாழ்த்துகள்! உங்களின் அர்ப்பணிப்பும், நெகிழ்ச்சியும், தளராத மனப்பான்மையும் லட்சக்கணக்கானோரை ஊக்குவிக்கிறது. நாங்கள் உங்களைப் பற்றி மிகவும் பெருமைப்படுகிறோம்!

பாரா ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற மனிஷா ராமதாசுக்கு வாழ்த்துகள்! உங்கள் தைரியமும், மன உறுதியும் தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளது. தொடர்ந்து பிரகாசியுங்கள்!" என்று தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்