< Back
மாநில செய்திகள்
நிபா வைரஸ் எதிரொலி: கேரளாவுக்கு கல்வி சுற்றுலா செல்வதை தவிர்க்க வேண்டும் – கல்லூரிகளுக்கு அறிவுறுத்தல்

கோப்புப்படம்

மாநில செய்திகள்

நிபா வைரஸ் எதிரொலி: "கேரளாவுக்கு கல்வி சுற்றுலா செல்வதை தவிர்க்க வேண்டும்" – கல்லூரிகளுக்கு அறிவுறுத்தல்

தினத்தந்தி
|
24 July 2024 5:43 PM GMT

நிபா வைரஸ் எதிரொலியாக தமிழக-கேரளா எல்லையோரத்தில் உள்ள அனைத்து சோதனைச்சாவடிகளும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கோவை,

கேரள மாநிலம் மலப்புரத்தில் நிபா வைரஸ் பாதிப்பால் 14 வயது சிறுவன் உயிரிழந்தான். மேலும் 60 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இது தொடர்பாக கேரள சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். இதில் சிறுவனுக்கு இணை நோய்கள் இருந்த நிலையில் திடீரென காய்ச்சல் வந்தது தெரியவந்தது.மேலும் நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்ட மறுநாளே சிறுவன் உயிரிழந்தான். இது தொடர்பாக மத்திய அரசின் சுகாதாரத்துறை சார்பிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் மத்திய சுகாதாரத்துறை குழு ஒன்று கேரளா விரைந்துள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக-கேரள எல்லை பகுதிகளில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு தமிழக சுகாதாரத்துறை சார்பில் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.தமிழக-கேரளா எல்லையோரத்தில் உள்ள அனைத்து சோதனைச்சாவடிகளையும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி கேரளாவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் தீவிர கண்காணிப்பிற்கு பிறகே தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகிறது.

இந்நிலையில் கோவை மண்டலத்திற்கு உள்பட்ட கல்லூரிகள் தங்கள் கல்லூரி மாணவர்களை கேரளாவிற்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கோவை மண்டலக் கல்லூரி கல்வி இயக்குநர் கலைச்செல்வி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், "கேரளாவில் நிபா வைரஸ் பரவிவரும் சூழ்நிலையில் மாணவ, மாணவிகளின் நலன் கருதி கோவை மண்டலத்திற்குள்பட்ட அரசு, அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி கல்லூரிகள் தங்கள் மாணவ, மாணவியர்களை கேரளாவுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்வதை தவிர்க்குமாறு தெரிவித்துக்கொள்கிறேன்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் செய்திகள்