< Back
மாநில செய்திகள்
லட்டு விவகாரம்: திண்டுக்கல் நிறுவனத்தில் அதிகாரிகள் ஆய்வு
மாநில செய்திகள்

லட்டு விவகாரம்: திண்டுக்கல் நிறுவனத்தில் அதிகாரிகள் ஆய்வு

தினத்தந்தி
|
21 Sep 2024 6:17 AM GMT

பால், நெய் பொருட்களின் மாதிரிகளை அதிகாரிகள் சேகரித்தனர்.

திண்டுக்கல்,

திருப்பதி தேவஸ்தானத்தில் பிரசாதம் தயாரிக்க 5 நிறுவனங்களிடமிருந்து டெண்டர் மூலம் நெய் கொள்முதல் செய்யப்படுகிறது. லட்டு தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் நெய்யின் தரம் சரியில்லை என கூறியதையடுத்து, கடந்த ஜூலை 6-ந்தேதி முதல் 12 -ந்தேதி வரை கொள்முதல் செய்யப்பட்ட நெய்யை குஜராத்தில் உள்ள தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்திற்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனை முடிவில் தமிழகத்தில் இருந்து சப்ளை செய்யப்பட்ட தனியார் நிறுவனத்தின் நெய்யில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நெய் வினியோக நிறுவனங்களில் திண்டுக்கல்லை சேர்ந்த நிறுவனமும் ஒன்றாகும். இந்நிலையில் திண்டுக்கல் நிறுவனத்தில் பால், நெய் பொருட்களின் மாதிரிகளை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையத்தின் அதிகாரிகள் சேகரித்தனர். மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் உணவு பாதுகாப்புத்துறையினரும் சோதனை நடத்தியுள்ளனர். திருப்பதி லட்டு தயாரிப்பதற்கு விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்