< Back
மாநில செய்திகள்
இன்ஸ்டாகிராம் காதலனுக்கு வேறு பெண்ணுடன் திருமணம்: மனஉளைச்சலில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

இன்ஸ்டாகிராம் காதலனுக்கு வேறு பெண்ணுடன் திருமணம்: மனஉளைச்சலில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு

தினத்தந்தி
|
10 July 2024 1:16 AM GMT

இன்ஸ்டாகிராம் காதலன் வேறு பெண்ணை திருமணம் செய்ததால் மனமுடைந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை,

சென்னை எம்.ஜி.ஆர்.நகர் பகுதியைச் சேர்ந்த சேகர் என்பவரின் மகள் அனிதா (22 வயது). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் அனிதாவுக்கு சென்னை சின்னமலை பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறி, கடந்த 2 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களுடைய காதல் விவகாரம் அனிதாவின் வீட்டுக்கு தெரியவந்தது.

இதனையடுத்து அவருடைய பெற்றோர் வாலிபர் குறித்து விசாரித்தபோது, அவர் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடுவதாக சிலர் தெரிவித்துள்ளனர். இதனால் அனிதாவின் பெற்றோர் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து அந்த வாலிபர் அனிதாவுடன் பேசுவதை நிறுத்தி கொண்டார். இந்த நிலையில் வாலிபர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமண கோலத்தில் வேறு ஒரு பெண்ணுடன் இருக்கும் தனது காதலனின் படத்தை அனிதா இன்ஸ்டாகிராமில் பார்த்துள்ளார்.

இதனால் அவர் மிகுந்த மனஉளைச்சலில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் சாப்பிடுவதற்காக அனிதா வீட்டுக்கு வந்தார். அப்போது நீண்டநேரமாக அவர் அறையை விட்டு வெளியே வராததால், சந்தேகம் அடைந்த அவருடைய பெற்றோர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு அனிதா தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் குறித்து எம்ஜிஆர் நகர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அனிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கே.கே.நகர் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தற்கொலை தொடர்பாக அனிதாவின் காதலனிடம் விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். காதல் தோல்வியால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்