< Back
மாநில செய்திகள்
நெடுஞ்சாலைத்துறை பணிகள் - அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
மாநில செய்திகள்

நெடுஞ்சாலைத்துறை பணிகள் - அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

தினத்தந்தி
|
3 Aug 2024 11:26 AM GMT

நெடுஞ்சாலைத்துறை பணிகளை அமைச்சர் எ.வ.வேலு இன்று ஆய்வு செய்தார்.

சென்னை,

சென்னை கிண்டி நெடுஞ்சாலை ஆராய்ச்சி வளாக கூட்ட அரங்கில், பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, கிராம சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகள், சென்னை பெருநகர சாலைப் பணிகள், திட்டங்கள் அலகு ஆகியவற்றின் பணிகளை இன்று ஆய்வு செய்தார். இது தொடர்பாக செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

"நபார்டு மற்றும் கிராம சாலைகள் அலகு, தேசிய நெடுஞ்சாலை அலகு, திட்டங்கள் அலகு, சென்னை பெருநகர அலகு ஆகிய நெடுஞ்சாலைத்துறையின் பல்வேறு பிரிவுகளில் நடைபெறும் பணிகளையும், புதியதாக தொடங்கப்பட வேண்டிய பணிகளையும், இன்று (03.08.2024) சென்னை, கிண்டி, நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையப் பயிற்சி கூட்ட அரங்கில் ஆய்வு செய்து, அனைத்து அலுவலர்களுக்கும் உரிய அறிவுரைகளை, பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்.

மழைக்காலங்களில், நெடுஞ்சாலைகளில் பொது மக்கள் இடையூறு இல்லாமல் பயணம் மேற்கொள்ளும் வகையில் சாலைகளைப் பராமரிக்க வேண்டும் என்று, அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கி திட்டப் பணிகளை ஆய்வு செய்தார்.

2,786 கிலோ மீட்டர் நீளமுள்ள ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகள் ரூ.3,056 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டு, இதர மாவட்ட சாலைகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டில், 605 கிலோ மீட்டர் நீளமுடைய ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளை ரூ.675 கோடி மதிப்பீட்டில், மேம்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்பதை குறிப்பிட்ட அமைச்சர், இச்சாலைகளை தரமுடையதாக அமைக்க வேண்டும், தரக்கட்டுப்பாட்டு அலுவலர்கள், இச்சாலைகளின் தரத்தினை ஆய்வு செய்ய வேண்டும் மற்றும் ஏதாவது குறைபாடு இருந்தால், நடவடிக்கை எடுக்க தயங்கக்கூடாது என்று உத்தரவிட்டார்.

கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.1,777 கோடி மதிப்பீட்டில் 381 பாலங்களின் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பாலங்களின் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்றும், புதியதாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், நிலுவையில் உள்ள பணிகள் ஆகியவை குறித்தும் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், கண்காணிப்புப் பொறியாளர்கள் நிலஎடுப்பு மற்றும் பணி முன்னேற்றம் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

திட்ட மதிப்பீடு சரியானதாக இருக்க வேண்டும் என்றும், திருத்திய நிர்வாக அனுமதி(Revised Administrative Sanction) கோருவதை இயன்றவரை தவிர்க்க முன்கூட்டியே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

சென்னை பெருநகர அலகு மூலம் சென்னையில் நடைபெறும் அனைத்து பணிகளும் விரைவில் முடிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்ட அமைச்சர், உதவிப் பொறியாளர்கள், கோட்டப் பொறியாளர்கள் மற்றும் கண்காணிப்புப் பொறியாளர்கள் ஆகியோர் திட்ட செயல்பாடு குறித்து, ஒன்றுகூடி விவாதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

"நம்ம சாலை செயலி"அனைவராலும் பாராட்டப்பட்டு, கொண்டிருக்கின்றது. பொதுமக்கள் மேலும் பாராட்டும்படி உடனடி நடவடிக்கைகள் மேற்கொண்டு பள்ளமில்லா சாலைகளைப் பாரமரிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

சென்னை, தஞ்சாவூர், கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் 43 ரெயில்வே மற்றும் உயர்மட்ட மேம்பாலங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், மேம்பாலங்கள் தரமுடையதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்."

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்