< Back
மாநில செய்திகள்
காதல் திருமணம் செய்த 4 மாதங்களில் பெண் போலீஸ் தற்கொலை..காரணம் என்ன..?
மாநில செய்திகள்

காதல் திருமணம் செய்த 4 மாதங்களில் பெண் போலீஸ் தற்கொலை..காரணம் என்ன..?

தினத்தந்தி
|
1 Jun 2024 2:57 AM GMT

காதல் திருமணம் செய்த 4 மாதங்களில் பெண் போலீஸ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை,

சென்னை ராயபுரம் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் பெண் போலீசாக பணியாற்றி வந்தவர் பிரியங்கா (வயது 27). இவரும், அதே போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவில் போலீசாக வேலை பார்த்து வரும் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த சேகர் (30) என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

கடந்த ஜனவரி மாதம் 24-ந் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பிறகு கணவன்-மனைவி இருவரும் ராயபுரம் தம்பு லைன் போலீஸ் குடியிருப்பில் வாழ்ந்து வந்தனர்.

இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. நேற்றும் வழக்கம்போல் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் சேகர், வீட்டில் இருந்து வெளியே சென்றுவிட்டார்.

இதனால் மனவேதனை அடைந்த பிரியங்கா, வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு திரும்பி வந்த சேகர், தனது காதல் மனைவி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது பற்றி தகவல் அறிந்து வந்த ராயபுரம் உதவி கமிஷனர் மகேந்திரன் தலைமையிலான போலீசார் பிரியங்கா உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சேகரை விசாரித்து வருகின்றனர். பிரியங்காவுக்கு திருமணம் ஆகி 4 மாதங்களே ஆவதால் இதுபற்றி ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்