< Back
மாநில செய்திகள்
நீட் தேர்வுக்கு எதிராக பெரிய அளவில் பிரசாரம் செய்தது தி.மு.க. - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மாநில செய்திகள்

நீட் தேர்வுக்கு எதிராக பெரிய அளவில் பிரசாரம் செய்தது தி.மு.க. - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தினத்தந்தி
|
9 Jun 2024 9:27 AM GMT

நீட் விலக்கு மசோதா ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-

நீட் தேர்வின் ஆபத்தை முதலில் முன்னறிவித்து அதற்கு எதிராக பெரிய அளவில் பிரசாரம் செய்தது தி.மு.க.தான். ஆட்சிக்கு வந்த பிறகு, நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை மேற்கொள்வதால் ஏற்படும் தாக்கங்களை ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் உயர்மட்டக் குழு ஒன்றை அமைத்தோம்.

அக்குழு மிக விரிவான தரவுப் பகுப்பாய்வுகள், மாணவர்கள், பெற்றோர், பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகள் ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கிய அறிக்கை வெளியிடப்பட்டது. நீட் தேர்வு ஏழைகளுக்கும், சமூகநீதிக்கும் எதிரானது என்பதை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் பிற மாநில அரசுகளுக்கும் அந்த அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது.

அந்த அறிக்கையில் இடம்பெற்ற பரிந்துரைகளின் அடிப்படையில், நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, கவர்னர் ஏற்படுத்திய தேவையற்ற தாமதத்தையடுத்து, தற்போது ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது.

நீட் தேர்வில் அண்மையில் நடந்த பரவலான குளறுபடிகளால், நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்த வேளையில், நீட் தேர்வின் பாதகங்களை அனைத்துத் தரப்பினரும் அறிந்துகொள்ள ஏதுவாக, நீதிபதி ஏ.கே. ராஜன் குழுவின் அறிக்கையை ஆங்கிலம் மற்றும் பிற இந்திய மொழிகளில் பகிர்கிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்