< Back
சிறப்புக் கட்டுரைகள்
ஆனந்த சுதந்திரம் அடைந்தார்களா?; இன்று உலக மகளிர் தினம்!
சிறப்புக் கட்டுரைகள்

ஆனந்த சுதந்திரம் அடைந்தார்களா?; இன்று உலக மகளிர் தினம்!

தினத்தந்தி
|
8 March 2025 6:30 AM IST

'ஆணுக்கு பெண் இளைப்பில்லை' என்பது நிரூபிக்கப்பட்டு இருக்கிறது.

"பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம். எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண் என்று கும்மியடி" , இது 100 ஆண்டுகளுக்கு முன்பு, தான் எழுதிய பாடல் மூலம் மகாகவி பாரதியார் கண்ட கனவு. அந்த கனவு நனவாக இத்தனை ஆண்டு காலம் ஆகியிருக்கிறது.

அன்றைய காலத்தில், 'அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?' என்று கல்வியே மறுக்கப்பட்டது. சிறு வயதிலேயே திருமணம், கணவன், குழந்தை என குடும்பத்துக்கே வாழ்க்கையை அர்ப்பணிக்கும் நிலையே இருந்தது. பெண்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்ட காலமும் உண்டு.

இப்படி, ஆண் ஆதிக்கம் தலைதூக்கி இருந்த காலத்தில்தான், பெண்களுக்கு ஆதரவான குரல்களும் அங்கொன்றும்.. இங்கொன்றுமாக ஒலிக்கத் தொடங்கின. அந்த குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கிய பிறகு, பெண்கள் வாழ்வு ஒளிபெறத் தொடங்கியது.

இன்றைக்கு ஒவ்வொரு ஆணுக்கு பின்னால் ஒரு பெண் இருந்து கொண்டிருக்கிறார். அது தாயாக, மனைவியாக, சகோதரியாக, தோழியாக, மகளாக என்று எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம். அவர்களின் இயக்கத்திலேயே இன்று உலகம் சுழன்று கொண்டிருக்கிறது.

முன்பெல்லாம் ஆசிரியை, நர்சு ஆகிய 2 வேலைகளில்தான் பெண்கள் இருப்பார்கள். மற்ற இடங்களில் எல்லாம் ஆண்களின் ஆதிக்கமே மேலோங்கி இருக்கும். ஆனால், இன்றைக்கு விஞ்ஞானம், கணினி, மருத்துவம் என்று அந்தப்பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. ஏன், ரெயில், விமானங்களை கூட இயக்கத் தொடங்கிவிட்டார்கள்.'ஆணுக்கு பெண் இளைப்பில்லை' என்பது நிரூபிக்கப்பட்டு இருக்கிறது.

ஆனால், வருத்தப்படக்கூடிய ஒரு விஷயம், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் இன்றைக்கு அதிகரித்துவிட்டன. குழந்தைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாள்தோறும் அரங்கேறிவருகின்றன. பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க சட்டங்கள் கடுமையாக்கப்பட்டாலும், குற்றங்கள் குறைந்த பாடில்லை.

நாடு சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகள் ஆகிவிட்டாலும், மகாத்மா காந்தி கண்ட கனவான, "இந்தியாவில் என்று நடு இரவில் பெண்கள் நகை அணிந்து தனியாக செல்கின்றனரோ, அன்றுதான் உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக உணரப்படும்" என்பது நிறைவேற இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ?. இன்றைக்கு நகை அணியாமல் பகல் நேரத்தில் செல்லும் பெண்களுக்குகூட பாதுகாப்பு இல்லாத நிலை. இத்தகைய சூழ்நிலையில்தான், இன்று உலக மகளிர் தினத்தை கொண்டாடுகிறோம்.

இந்த ஆண்டு ஐ.நா.வின் அறிவிப்புப்படி, மகளிர் தின கருப்பொருள் "அனைத்து பெண்கள், சிறுமிகளுக்கு உரிமைகள், சமத்துவம், அதிகாரம் அளித்தல்" என்பதாகும். அதை நிறைவேற்ற இந்நாளில் உறுதியேற்போம்.

மேலும் செய்திகள்