< Back
புதுச்சேரி
மானிய விலையில் காய்கறி விதைகள், இடுபொருட்கள்
புதுச்சேரி

மானிய விலையில் காய்கறி விதைகள், இடுபொருட்கள்

தினத்தந்தி
|
15 Aug 2022 5:23 PM GMT

மானிய விலையில் காய்கறி விதைகள், வேளாண் இடுபொருட்களை முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.

புதுச்சேரி

மானிய விலையில் காய்கறி விதைகள், வேளாண் இடுபொருட்களை முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.

மானிய விலையில்...

புதுவை அரசின் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை தோட்டக்கலை பிரிவின் மூலம் தோட்டக்கலை பயிர் சாகுபடி பரப்பளவு மற்றும் உற்பத்தி திறன் அபிவிருத்தியை நோக்கமாக கொண்டு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை வீட்டு புறக்கடை மற்றும் மாடியில் சாகுபடி செய்வதை ஊக்கப்படுத்தும் வகையில் ரூ.3 ஆயிரம் மதிப்பிலான காய்கறி விதைகள், செடி வளர்க்கும் பைகள், மண்கலவை, உயிர் உரங்கள், உயிரி கட்டுப்பாட்டு காரணிகள், இயற்கை பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் கருவிகள் உள்ளடங்கிய தொகுப்பு மானிய விலையில் ரூ.750-க்கு வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தை செயல்படுத்தும் விதமாக நடப்பாண்டில் ஆடி பருவத்துக்கு ஏற்ற காய்கறி விதைகள், இடுபொருட்கள் மற்றும் உபகரணங்கள் அடங்கிய தொகுப்பை சட்டசபை வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், வேளாண்துறை இயக்குனர் பாலகாந்தி, கூடுதல் வேளாண் இயக்குனர் சிவராமன், துணை வேளாண் இயக்குனர் சண்முகவேலு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அனுமதிசீட்டு

காய்கறி விதைகள், இடுபொருட்கள் பெறுவதற்கான விண்ணப்பங்களை புதுவை தாவரவியல் பூங்காவில் இயங்கும் கூடுதல் வேளாண் இயக்குனர் அலுவலகத்தில் நேரடியாக பெற்று அதனுடன் ஆதார், ரேஷன்கார்டு நகல் மற்றும் வீட்டின் உரிமை ஆவணத்தோடு அண்மையில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் பெறப்பட்டவுடன் உரிய அனுமதிசீட்டு வழங்கப்படும். இந்த அனுமதிசீட்டினை தாவரவியல் பூங்கா அருகில் செயல்பட்டு வரும் பாசிக் நிறுவனத்திடம் ரூ.750 செலுத்தி பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் செய்திகள்