
ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் தண்டனை

புதுவையில் 2-வது மனைவியை கொலை செய்த வழக்கில் ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி புதுச்சேரி கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
புதுச்சேரி
புதுவையில் 2-வது மனைவியை கொலை செய்த வழக்கில் ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி புதுச்சேரி கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
2-வது மனைவி கொலை
புதுவை வினோபா நகர் பொய்யாகுளம் பகுதியை சேர்ந்தவர் லுவாஸ் மதிவாணன் (வயது 38). ஆட்டோ டிரைவர். இவருக்கு 2 மனைவிகள் இருந்தனர். இதில் 2-வது மனைவி லட்சுமி என்ற வள்ளியம்மை (32). இவர் கொக்கு பார்க் பகுதியில் பூ வியாபாரம் செய்து வந்தார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். முதல் மனைவி மேட்டுப்பாளையம் பகுதியில் 2 மகள்களுடன் வசித்து வருகிறார்.
இந்தநிலையில் லுவாஸ் மதிவாணனுக்கு 2-வது மனைவி லட்சுமியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்தநிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ந் தேதி மதியம் மீண்டும் அவர்களுக்கிடையே பிரச்சினை ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த லுவாஸ் மதிவாணன் வீட்டில் இருந்த மரக்கட்டையால் லட்சுமியை அடித்து கொலை செய்தார்.
ஆயுள் தண்டனை
இதுகுறித்து கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து லுவாஸ் மதிவாணனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ஜெ.செல்வநாதன் முன்னிலையில் விசாரணை நடந்து வந்தது.
இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் குற்றம் நிரூப்பிக்கப்பட்டதால் ஆட்டோ டிரைவர் லுவாஸ் மதிவாணனுக்கு ஆயுள் தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். அபராத தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக 6 மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ரபீந்திரன் வாதாடினார்.