< Back
புதுச்சேரி
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; வாலிபர் பலி
புதுச்சேரி

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; வாலிபர் பலி

தினத்தந்தி
|
10 July 2023 4:39 PM GMT

புதுவை பாகூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார். பெண் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

பாகூர்

அரியாங்குப்பம் பி.சி.பி. நகர் முதல் தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் தினேஷ்குமார் (வயது 23). இவரது பெற்றோர் இறந்துவிட்ட நிலையில், உறவினர் அர்ச்சுனன் என்பவரின் பராமரிப்பில் இருந்து வந்தார். நேற்று இரவு அரியாங்குப்பத்தில் உள்ள நண்பர்களை பார்த்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார். புதுச்சேரி - கடலூர் சாலையில் வந்த அவர், சாலையின் நடுவே உயரம் குறைவாக இருந்த தடுப்புச்சுவரை கடக்க முயன்றார்.

அப்போது கடலூரில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த கார், எதிர்பாராத விதமாக தினேஷ்குமார் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், தினேஷ்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்தில் சிக்கி மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த அரியாங்குப்பம் பிரபு (23) மற்றும் காரில் பயணம் செய்த நெல்லித்தோப்பு மெயின்ரோடு பகுதியை சேர்ந்த ரமேஷ் மனைவி சாந்தி (55) ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்