
மகா கும்பமேளாவில் புனித நீராடிய உத்தரகாண்ட் முதல்-மந்திரி

மகா கும்பமேளாவில் குடும்பத்துடன் புனித நீராடிய உத்தரகாண்ட முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி.
லக்னோ,
உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த மாதம் 13-ந்தேதி தொடங்கியது. பிப்ரவரி 26-ந்தேதி வரை 45 நாட்கள் மகா கும்பமேளா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உள்ளது.
இதற்காக 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 1,800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள், 25 ஆயிரம் தொழிலாளர்கள், 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை அரசு அமைத்துள்ளது. இந்த கும்பமேளாவில், இதுவரை 40 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் வருகை தந்து, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.
இந்நிலையில், இன்று காலை ஜனதிபதி திரவுபதி முர்மு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய நிலையில், உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி இன்று தனது குடும்பத்தோடு வந்து புனித நீராடினார்.

இந்த கும்பமேளாவில், பொது மக்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் புனித நீராடி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்டோர் புனித நீராடினர் என்பது குறிப்பிடத்தக்கது.