
திரிவேணி சங்கமத்தில் நீராடிய மத்திய மந்திரி அமித்ஷா

உத்தர பிரதேசத்தில் நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் மத்திய மந்திரி அமித்ஷா இன்று பங்கேற்று, திரிவேணி சங்கமத்தில் நீராடினார்.
லக்னோ,
உத்தரபிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த 13-ந்தேதி சிறப்பாக தொடங்கியது. கங்கை மற்றும் யமுனை ஆகிய இரு ஆறுகள் சங்கமிக்கும் புனித பகுதியில் முதல் நாளில் 1 கோடி பேர் நீராடினர் இந்த மகா கும்பமேளா நிகழ்ச்சி பிப்ரவரி 26-ந்தேதி வரை 45 நாட்களுக்கு நடைபெறும்.
இந்தியாவின் பழமையான கலாசாரம் மற்றும் மத பாரம்பரியங்களை உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாற்றும் பெருமை மிக்க மகா கும்பமேளாவுக்கு இந்த வருடம் 40 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள். இதனால், ரூ.2 லட்சம் கோடி வருவாய் கிடைக்க கூடும் என்று என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 13 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.
இதற்காக 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 1,800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள், 25 ஆயிரம் தொழிலாளர்கள், 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை அரசு அமைத்துள்ளது.
இந்நிலையில், உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகருக்கு இன்று வருகை தந்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மகா கும்பமேளாவில் கலந்து கொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார். அவருடன் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா உள்ளிட்டோரும் புனித நீராடினர்.

பின்னர், பூரி சங்கராச்சாரியார் மற்றும் துவாரகா சங்கராச்சாரியார் ஆகியோரை நேரில் சந்தித்து அவர் ஆசி பெற்றார். முன்னதாக, பிரயாக்ராஜ் நகருக்கு வந்த அமித்ஷாவை அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மற்றும் மந்திரிகள் வரவேற்றனர்.