< Back
தேசிய செய்திகள்
கோரிக்கைள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்; மராட்டிய பயிற்சி டாக்டர்கள் அமைப்பு அறிவிப்பு
தேசிய செய்திகள்

கோரிக்கைள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்; மராட்டிய பயிற்சி டாக்டர்கள் அமைப்பு அறிவிப்பு

தினத்தந்தி
|
14 Aug 2024 12:31 AM GMT

மேற்கு வங்காளத்தில் பெண் டாக்டர் பலாத்கார வழக்கில், கோரிக்கைள் அனைத்தும் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என மராட்டிய பயிற்சி டாக்டர்களுக்கான கூட்டமைப்பு அறிவித்து உள்ளது.

மும்பை,

மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவின் வடபகுதியில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இதில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த 9-ந்தேதி கொடூர கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். அரை நிர்வாண கோலத்தில் உயிரிழந்த நிலையில் அவருடைய உடல் கண்டெடுக்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர், 23-ந்தேதி வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டு உள்ளார். இதனை தொடர்ந்து, பல்வேறு பகுதிகளிலும் பயிற்சி டாக்டர்கள் கூட்டமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் நேற்று 2-வது நாளாகவும் நீடித்தது.

டாக்டர்கள் கூட்டமைப்பில் ஒரு பிரிவினர் போராட்டம் வாபஸ் பெறப்படம் என அறிவித்தனர். இந்நிலையில், மராட்டிய பயிற்சி டாக்டர்களுக்கான கூட்டமைப்பு தொடர்ந்து போராடுவது என முடிவு செய்துள்ளது. எங்களுடைய கோரிக்கைள் அனைத்தும் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்து உள்ளனர்.

இந்த முடிவு உறுதியானது. எங்களுடைய கோரிக்கைகள் திருப்தி ஏற்படும் வகையில் நிறைவேறும் வரை அதனை நிறுத்த போவதில்லை என்று அவர்கள் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.

தெற்கு பீகாரின் பெரிய அரசு மருத்துவமனையான அனுகிரக நாராயண் மகத் மருத்துவ கல்லூரியின் மருத்துவர்களும், அகர்தலா அரசு மருத்துவ கல்லூரி மருத்துவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அசாமின் கவுகாத்தி மருத்துவ கல்லூரியின் இளநிலை மருத்துவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், 3-வது நாளாக போராட்டம் தொடரும் என கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்