< Back
தேசிய செய்திகள்
மாணவி பலாத்கார வழக்கு: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீது நாளை மறுநாள் விசாரணை
தேசிய செய்திகள்

மாணவி பலாத்கார வழக்கு: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீது நாளை மறுநாள் விசாரணை

தினத்தந்தி
|
25 Jan 2025 6:14 AM IST

அண்ணா பல்கலைக்கழக மாணவி பலாத்கார வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு மனு மீது ஜன., 27-ம் தேதி விசாரணை நடைபெறுகிறது.

புதுடெல்லி,

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். அதே சமயம் இந்த வழக்கை விசாரித்து வரும் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் பரிந்துரை பேரில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்கிடையே இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) வெளியானது சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அதே சமயம் இது தொடர்பாகச் சென்னை அண்ணாநகர் துணை ஆணையர் சினேகபிரியா, ஆவடி துணை ஆணையர் ஐமான் ஜமால், சேலம் துணை ஆணையர் அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது.

இதற்கிடையே சென்னை ஐகோர்ட்டு இந்த வழக்கைத் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. அதன்படி வழக்கை விசாரித்த நீதிபதிகள், "பாதிக்கப்பட்ட மாணவியின் கண்ணியம் காக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட மாணவியின் அடையாளத்தை எப்.ஐ.ஆர்.-ல் குறிப்பிட்டது சட்டப்படி தவறு என்பதால் எந்த கட்டணமும் வசூலிக்காமல் மாணவி படிப்பைத் தொடர அனுமதிக்க வேண்டும். எப்ஐஆரை வெளியிட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவிக்கு இடைக்கால நிவாரணமாக 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் இந்த வழக்கு தொடர்பாகச் செய்தியாளர் சந்திப்பை நடத்தச் சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அருண் தமிழக அரசிடம் அனுமதி பெறவில்லை எனவே அவர் மீது சட்டப்படி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தனர்.

இதைத்தொடர்ந்து போலீஸ் கமிஷனருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாம் என்ற ஐகோர்ட்டு உத்தரவை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்தது.

இந்நிலையில் மாநில அரசு சார்பில் வக்கீல் டி.குமணன் தாக்கல் செய்த இந்த மேல்முறையீடு மனு, வருகிற 27-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவை விசாரிக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்