
தொகுதி மறுசீரமைப்பால் தென் மாநிலங்கள் பாதிக்கப்படும்: திருச்சி சிவா

தொகுதி மறுசீரமைப்பால் தென் மாநிலங்கள் பாதிக்கப்படும் என்று திருச்சி சிவா எம்.பி. கூறினார்.
புதுடெல்லி,
மாநிலங்களவையில் சுகாதார அமைச்சக மானியக் கோரிக்கை விவாதத்தின்போது திமுக எம்.பி. திருச்சி சிவா பேசியதாவது:-
தென் மாநிலங்களில் குடும்பக் கட்டுப்பாடு திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. சுகாதாரத்திற்காக இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் 4.2 சதவீதம் நிதி ஒதுக்கப்படுகிறது. சுகாதாரத்திற்கு ஒதுக்கும் நிதி 2.5 சதவீதத்தில் இருந்து 1.9 சதவீதமாக குறைந்துள்ளது. தமிழ்நாடு அரசு 4.9% நிதியை சுகாதாரத்துறைக்கு ஒதுக்கியுள்ளது. சுகாதாரம் மக்களின் அடிப்படை உரிமையாக இருக்கும் போது இந்த நிதி ஒதுக்கீடு மிகக்குறைவு.
உ.பி.யில் 3767 பேருக்கு ஒரு மருத்துவர், அரியானாவில் 6,037 பேருக்கு ஒரு மருத்துவர்தான் உள்ளனர். ஆனால், தமிழ்நாட்டில் 253 பேருக்கு ஒரு மருத்துவர் உள்ளார். எனினும், நீட் தேர்வு போன்ற விஷயங்களால் சிறப்பான மாநிலங்களை தண்டிக்கும் போக்குதான் நிலவுகிறது. மக்கள் தொகை உயர்வை தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்கள் சிறப்பாக கையாண்டன. ஆனால், தொகுதி மறுசீரமைப்பில் எங்களுக்கு அநீதி இழைக்கப்படும் சூழல் உள்ளது.
தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் பாதிக்கப்படும். தொகுதி மறு சீரமைப்பால் தமிழ்நாட்டிலுள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகள் 31ஆக குறையும். 20 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ள கேளராவில் 12 ஆக குறையும்; தொகுதி மறுசீரமைப்பால் உ.பி., பிகார் மாநிலங்களில் நாடாளுமன்ற தொகுதிகள் அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.