
ஆயுத தொழிற்சாலை வெடி விபத்து; உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு மராட்டிய அரசு நிவாரணம் அறிவிப்பு

ஆயுத தொழிற்சாலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு மராட்டிய அரசு நிவாரணம் அறிவித்துள்ளது.
மும்பை,
மராட்டிய மாநிலம் பந்தாரா மாவட்டத்தில் ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்களை தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலை வளாகத்தில் நேற்று காலை 10.30 மணியளவில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.
இந்த சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும், 7 பேர் படுகாயமடைந்தனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புக்குழுவினர் தொழிற்சாலையில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். படுகாயமடைந்த 7 பேரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்த வெடிவிபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு மராட்டிய அரசு நிவாரணம் அறிவித்துள்ளது. இதன்படி ஆயுத தொழிற்சாலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என மராட்டிய மாநில முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார்.