
புதுமண தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை

உத்தரபிரதேசத்தில் புதுமண தம்பதிகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டம் சாப்ராவைச் சேர்ந்த நந்த கிஷோரின் மகன் அஜித் குமார் (25) மற்றும் கவுதம் பிரசாத்தின் மகள் சங்கீதா தேவி (22). இவர்கள் இருவருக்கும் 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் இருவருக்கும் இடையில் பலமுறை குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. இதனையடுத்து இன்று இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு முற்றி ஒரு கட்டத்திற்கு மேல் இருவரும் தனித்தனி அறைக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் கிடைத்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.