
ஒரே எண்ணில் பலருக்கு வாக்காளர் அடையாள அட்டை: தேர்தல் ஆணையம் அளித்த உறுதி என்ன..?

எண்கள் ஒரே மாதிரி இருந்தாலும், புகைப்படம், தொகுதி, வாக்குச்சாவடி விவரங்கள் வெவ்வேறாகவே இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
புதுடெல்லி,
மேற்கு வங்காள மாநிலம் கூச் பெகர்பகுதியில் உள்ள ஒருவரின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணும், உத்தரபிரதேச மாநிலம் திதர்கஞ்ச் பகுதியில் உள்ள ஒருவரின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணும் ஒன்றாக உள்ளன என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டி இருந்தனர். இதன்மூலம் போலி வாக்காளர்கள் மற்றும் வெளிமாநிலத்தை சேர்ந்த வாக்காளர்கள் மேற்கு வங்காளத்தில் உள்ளதாக அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி இருந்தார்.
ஆனால் இதை மறுத்த தேர்தல் ஆணையம், மாநிலங்களின் வாக்காளர் பட்டியல் தரவுகளை தேர்தல் ஆணையத்தின் இணையதளத்துக்கு அனுப்பப்படுவதற்கு முன்பு பின்பற்றப்படும் முறை காரணமாக, வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சில வாக்காளர்களுக்கு ஒரே மாதிரியான வாக்காளர் அடையாள அட்டை எண்கள் ஒதுக்கப்படுவதாக விளக்கம் அளித்தது.
அவர்கள் போலி வாக்காளர்கள் அல்ல என்று கூறிய தேர்தல் ஆணையம், எண்கள் ஒரே மாதிரி இருந்தாலும், புகைப்படம், தொகுதி, வாக்குச்சாவடி விவரங்கள் வெவ்வேறாகவே இருக்கும் என்றும் கூறியது. எனினும் இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ள திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், இந்த பிரச்சினைக்கு தீர்வு காண தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தின.
இந்த நிலையில் ஒரே வாக்காளர் அடையாள அட்டை எண் பிரச்சினையில் 3 மாதத்துக்குள் தீர்வு காணப்படும் என தேர்தல் கமிஷன் உறுதி அளித்து உள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவின் வாக்காளர் பட்டியல் உலகெங்கிலும் உள்ள வாக்காளர் பட்டியலை விட மிகப்பெரிய தரவுத்தளமாகும். இது 99 கோடிக்கு மேல் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களைக் கொண்டுள்ளது. இந்த ஒரே வாக்காளர் அடையாள அட்டை எண் விவகாரம் ஏற்கனவே தேர்தல் கமிஷனால் தானாக ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு இருந்தது. வாக்காளர் அடையாள அட்டை எண் எப்படி இருந்தாலும், குறிப்பிட்ட வாக்குச்சாவடியை சேர்ந்த வாக்காளர் ஒருவர், அந்த வாக்குச்சாவடியில் மட்டுமே ஓட்டுப்போட முடியும். வேறு எங்கும் வாக்களிக்க முடியாது.
எனினும் நீண்ட காலமாக இருக்கும் இந்த பிரச்சினைக்கு, தொழில்நுட்பக்குழு மற்றும் சம்பந்தப்பட்ட மாநில தேர்தல் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து அடுத்த 3 மாதங்களுக்குள் தீர்வு காணப்படும். இவ்வாறு ஒரே வாக்காளர் அடையாள அட்டை எண்ணை கொண்டிருக்கும் வாக்காளர்களுக்கு ஒரு தனித்துவமான தேசிய வாக்காளர் அடையாள அட்டை எண் வழங்கப்படும். இந்த புதிய திட்டம் எதிர்கால வாக்காளர்களுக்கும் பயன்படுத்தப்படும்.
இவ்வாறு அதில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.