
கேரளாவில் மாடியில் இருந்து தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

26 வது மாடியில் இருந்து தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள திருப்புனித்துறையைச் சேர்ந்தவர் சிறுவன் மிஹிர் (வயது16). இவர் அங்குள்ள பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிந்து வந்தார். இந்த நிலையில், சிறுவன் மிஹிர் குடியிருப்பின் 26வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தான். இதில் படுகாயமடைந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.
அருகில் இருந்தவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இச்சம்பவம் குறித்து அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். இச்சம்பவம் மதியம் 3 மணியளவில் நடந்தது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
தொடர்ந்து சிறுவனின் உடலை மீட்ட போலீசார் மருத்துவ பரிசோதனைக்காக திருப்புனித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 26 வது மாடியில் இருந்து தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.