
கேரளாவில் பெண்ணை கடித்துக்கொன்ற ஆட்கொல்லி புலி சடலமாக கண்டெடுப்பு

மற்றொரு புலியுடன் ஏற்பட்ட மோதலில் காயமடைந்து இறந்திருக்கலாம் என்று வனத்துறையினர் கூறுகின்றனர்.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள மானந்தவாடி பகுதியில் கடந்த 24-ந்தேதி ராதா என்ற பெண் ஒருவர் தேயிலை தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது புலி தாக்கி பலியானார். அந்த பெண்ணின் உடல் பாகங்களை புலி தின்றதாக கூறப்படுகிறது. ராதாவை கொன்ற புலியை சுட்டுக்கொல்ல வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அந்த கோரிக்கையை வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டமும் நடத்தினர்.
இதையடுத்து ஆட்கொல்லி புலியை சுட்டுப்பிடிக்க உத்தரவிடப்பட்டது. மேலும் பொதுமக்கள் யாரையும் புலி தாக்கிவிடக்கூடாது என்பதற்காக, மானந்தவாடி பகுதியில் 48 மணிநேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது . வனப்பகுதியில் 6 குழுக்களாக பிரிந்து வனத்துறையினர் புலியை தேடினர்.
அப்போது வனப்பகுதியில் உள்ள குப்பைமேடு பகுதியில் வனத்துறையினர் தேடிவந்த ஆட்கொல்லி புலி இறந்து கிடந்தது. அந்த புலியின் கழுத்து பகுதியில் 2 ஆழமான வெட்டுக் காயங்கள் இருந்துள்ளன. மற்றொரு புலியுடன் ஏற்பட்ட மோதலில் இந்த புலி காயமடைந்து இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆட்கொல்லி புலி எப்படி இறந்தது? என்று வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆட்கொல்லி புலி இறந்ததால் அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.