< Back
தேசிய செய்திகள்
சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக கோடீஸ்வர சிங், மகாதேவன் நியமனம்; மத்திய அரசு அறிவிப்பு
தேசிய செய்திகள்

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக கோடீஸ்வர சிங், மகாதேவன் நியமனம்; மத்திய அரசு அறிவிப்பு

தினத்தந்தி
|
16 July 2024 10:00 AM GMT

சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதியாக, மணிப்பூரில் இருந்து முதன்முறையாக ஒருவர் நியமனம் செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்.

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதிகளாக என். கோடீஸ்வர சிங் மற்றும் ஆர். மகாதேவன் ஆகிய இருவரை நியமனம் செய்வதற்கான அறிவிப்பை மத்திய அரசு இன்று வெளியிட்டு உள்ளது.

இதுபற்றி மத்திய சட்ட மற்றும் நீதி துறைக்கான மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால் அவருடைய எக்ஸ் சமூக ஊடக பதிவில் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள அதிகாரங்களின்படி, இந்திய தலைமை நீதிபதியுடன், ஜனாதிபதி கலந்து ஆலோசனை செய்து விட்டு, சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதிகளாக என். கோடீஸ்வர சிங் மற்றும் ஆர். மகாதேவன் ஆகிய இருவரை நியமனம் செய்ய உள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சுப்ரீம் கோர்ட்டின் கொலீஜியம் சமீபத்தில், ஜம்மு மற்றும் காஷ்மீர் மற்றும் லடாக் ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியான நாங்மெய்காபம் கோடீஸ்வர சிங் மற்றும் சென்னை ஐகோர்ட்டின் பொறுப்பு தலைமை நீதிபதியான ஆர். மகாதேவன் ஆகியோரை சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதிகளாக நியமிப்பதற்கு பரிந்துரை செய்திருந்தது.

இதில், மணிப்பூரில் இருந்து முதன்முறையாக ஒருவர் சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதியாக நியமனம் செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்.

சுப்ரீம் கோர்ட்டின் கொலீஜியத்தில் இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பி.ஆர். கவாய், சூரிய காந்த் மற்றும் ரிஷிகேஷ் ராய் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

நீதிபதிகளின் நியமனம் பற்றி சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் வெளியிட்ட செய்தியில், நீதிமன்ற செயல்பாடு, நிர்வாகத்தில் புத்திகூர்மை, ஒருமைப்பாடு மற்றும் மதிப்பு ஆகியவற்றிற்காக கோடீஸ்வர சிங்கை, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிப்பது சிறப்பாக இருக்கும் என்று சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் பார்க்கிறது.

நீதி துறையில் நல்ல அனுபவம் வாய்ந்த நீதிபதி மகாதேவனின் பணி மற்றும் ஐகோர்ட்டின் ஒரு மூத்த நீதிபதி ஆகியவற்றால், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக அவரை நியமிப்பது சிறப்பான முறையில் பொருந்தும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் பார்க்கிறது.

அவர்கள் இருவரும் நீதிபதிகளாக பதவியேற்று கொண்டதும் சுப்ரீம் கோர்ட்டு, 34 நீதிபதிகள் என்ற அதன் முழு பலத்துடன் செயல்படும்.

மேலும் செய்திகள்