
File image
ராஜஸ்தான்: தண்ணீர் தொட்டியில் விழுந்த 3 சிறுமிகள் பலி

பள்ளியில் இருந்த தண்ணீர் தொட்டியில் விழுந்த 3 சிறுமிகள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தானின் பிகானர் மாவட்டத்தின் நோகா நகரில் உள்ள கெட்லி கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொடக்கப்பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்த 3 சிறுமிகள் தண்ணீர் தொட்டியில் விழுந்தனர். எட்டு அடி ஆழமுள்ள தொட்டியில் விழுந்த சிறுமிகள் பரிதாபமாக நீரில் மூழ்கினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிறுமிகளை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுமிகளை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். உயிரிழந்த சிறுமிகள் பிரக்யா ஜாட், பாரதி ஜாட் மற்றும் ரவீனா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விளையாடும்போது தொட்டியின் பட்டைகள் உடைந்து 3 சிறுமிகளும் தொட்டியில் விழுந்ததாக நோகா காவல் நிலைய அதிகாரி அமித் குமார் தெரிவித்துள்ளார்.