< Back
தேசிய செய்திகள்
13 தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள்: இந்தியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி
தேசிய செய்திகள்

13 தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள்: இந்தியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி

தினத்தந்தி
|
13 July 2024 11:59 AM GMT

நாட்டில் நடந்த 13 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில் இந்தியா கூட்டணியை சேர்ந்த கட்சிகள் அதிக இடங்களில் வெற்றி பெற்று உள்ளன.

புதுடெல்லி,

நாடு முழுவதும் 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 10-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தி.மு.க. சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த நா. புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் மரணம் அடைந்ததையடுத்து, விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

இதே போல மேற்கு வங்காளத்தில் உள்ள ராய்கஞ்ச், ரனாகாட் தக்சின், பாக்தா மற்றும் மணிக்தலா ஆகிய 4 தொகுதிகள், மத்திய பிரதேசத்தில் அமர்வாரா, பீகாரில் ரூபாலி, உத்தரகாண்டில் உள்ள பத்ரிநாத் மற்றும் மங்களூர், பஞ்சாப்பில் ஜலந்தர் மேற்கு, இமாசல பிரதேசத்தில் டேஹ்ரா, ஹமிர்பூர் மற்றும் நலகர் ஆகிய தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.

இந்த நிலையில் இடைத்தேர்தல் நடைபெற்ற 13 தொகுதிகளிலும் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. பஞ்சாப்பில் உள்ள ஜலந்தர் மேற்கு தொகுதியில் இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி இடையே பிரதான போட்டி நிலவியது. மற்ற 12 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி - இந்தியா கூட்டணி கட்சிகள் இடையே போட்டி நிலவியது. 13 தொகுதிகளிலும் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்றது.

இதில், அனைத்து தொகுதிகளிலும் கட்சி வாரியாக பெற்ற வெற்றி விவரங்கள் வெளிவந்துள்ளன. இதன்படி, பீகாரில் ரூபாலி தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். இமாசல பிரதேசத்தில் 2 இடங்களில் காங்கிரசும், பா.ஜ.க. 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க.வும், பஞ்சாப்பில் ஆம் ஆத்மியும் வெற்றி பெற்றுள்ளன.

இதேபோன்று தமிழகத்தில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. உத்தரகாண்டில் 2 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனால், இந்த இடைத்தேர்தல்களில் இந்தியா கூட்டணியை சேர்ந்த கட்சிகள் அதிக இடங்களில் வெற்றி பெற்று உள்ளன. மத்திய பிரதேசம் மற்றும் இமாசல பிரதேசத்தில் தலா 1 தொகுதியில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது.

மேலும் செய்திகள்