
மணிப்பூர்: பாதுகாப்புப்படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் ஆயுதக்குழுவினர் 12 பேர் கைது

மணிப்பூர் பாதுகாப்புப்படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் ஆயுதக்குழுக்களை சேர்ந்த 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
இம்பால்,
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் குக்கி மற்றும் மெய்தி இன மக்களுக்கு இடையே மோதல் வெடித்தது. இந்த வன்முறையில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
இந்த வன்முறை சம்பவங்களால் அம்மாநில முதல்-மந்திரி பிரேன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட பாதுகாப்புப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, அம்மாநிலத்தில் குக்கி மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் கடந்த 6ம் தேதி வன்முறை வெடித்தது. இதையடுத்து, பாதுகாப்புப்படையினர் தடியடி நடத்தி வன்முறையை கட்டுப்படுத்தினர்.
இந்நிலையில், மணிப்பூரின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பாதுகாப்புப்படையினர் அதிரடி தேடுதல் வேட்டை நடத்தினர். இந்த தேடுதல் வேட்டையில் தடைசெய்யப்பட்ட ஆயுதக்குழுவை சேர்ந்த 12 பேர் கைது செய்யப்பட்டனர்.