தேசிய செய்திகள்
100 நாள் வேலை: ரூ. 4,034 கோடி நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்: கனிமொழி எம்.பி.
தேசிய செய்திகள்

100 நாள் வேலை: ரூ. 4,034 கோடி நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்: கனிமொழி எம்.பி.

தினத்தந்தி
|
25 March 2025 2:03 PM IST

100 நாள் வேலை திட்டத்தில், தமிழ்நாட்டிற்கான ரூ. 4,034 கோடி நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று திமுக எம்.பி. கனிமொழி வலியுறுத்தி உள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில் திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி பேசியதாவது:-

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் (MGNREGS) செயல்படுத்தப்படத் தொடங்கியதிலிருந்து, தமிழ்நாடு வேலைவாய்ப்பு உருவாக்கம் உள்ளிட்ட பல்வேறு அளவுகோல்களில் தொடர்ந்து சிறப்பாக செயல்படும் மாநிலங்களில் ஒன்றாக உள்ளது.

தமிழ்நாட்டில், 76 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த கிட்டத்தட்ட 91 லட்சம் தொழிலாளர்கள், மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதித் திட்டப் பணிகளில் தீவிரமாகப் பங்கேற்கின்றனர். இதில் 86 சதவீத வேலைவாய்ப்பு பெண் தொழிலாளர்களுக்கும், கிட்டத்தட்ட 29 சதவீத தொழிலாளர்கள் எஸ்சி/எஸ்டி குடும்பங்களுக்கும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1 லட்சம் மாற்றுத்திறனாளி தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.

மத்திய அரசு நிதியை வழங்காததால், தமிழ்நாட்டில் இந்த திட்டத்தில் வேலைகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய ரூ. 2,985 கோடி சம்பளத்தொகை கடந்த 4.5 மாதங்களாக (24 மார்ச் 2025 நிலவரப்படி) நிலுவையாக உள்ளது. மேலும், 24 மார்ச் 2025 நிலவரப்படி, ரூ.1,048 கோடி மதிப்புள்ள பொருள் செலவினப் பாக்கிகளைச் சேர்த்துக் கொண்டால், தமிழ்நாட்டிற்கு நிலுவையில் உள்ள மொத்த நிதி ரூ.4,034 கோடியாக இருக்கும்.

இதுதொடர்பாக, தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நிலுவையில் உள்ள ஊதியத் தொகைகளை உடனடியாக வழங்குமாறு ஏற்கனவே 13.01.2025 அன்று பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். ஆனால், இதுவரை அந்த தொகை விடுவிக்கப்படவில்லை. எனவே, மத்திய அரசு, தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய ரூ/4,034 கோடி நிலுவைத் தொகையை விரைவாக விடுவிக்க வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்