< Back
ஆன்மிகம்
சபரிமலையின் 18 படிகள் உணர்த்தும் தத்துவம்
ஆன்மிகம்

சபரிமலையின் 18 படிகள் உணர்த்தும் தத்துவம்

தினத்தந்தி
|
22 Nov 2024 10:13 AM IST

பதினெட்டு வித குணங்களில் நல்லவற்றைப் பின்பற்றியும், தீயவற்றை களைந்தும் வாழ்க்கைப் படியில் ஏறிச்சென்றால் இறைவன் அருள் கிடைக்கும்.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் பொன்னால் பதியப்பட்ட சத்தியம் நிறைந்த பதினெட்டு படிகளுக்கும் காரணமும் தத்துவமும் உண்டு.

காமம்: பற்று உண்டானால் பாசம், கோபம், மோகம் ஏற்பட்டு புத்தி நாசமடைந்து அழிவு ஏற்படுகிறது.

குரோதம்: கோபம் குடியை கெடுத்து, கோபம் கொண்டவனையும் அவன் சுற்றத்தையும் அழித்து விடும்.

லோபம்: பேராசைக்கு இடம் கொடுத்தால் இருப்பதும் போய் விடும். பேராசை பெரு நஷ்டம். ஆண்டவனை அடைய முடியாது.

மதம்: யானைக்கு மதம் பிடித்தால் ஊரையே அழித்து விடும். அந்த யானையை அப்போது யாராவது விரும்புவார்களா? அதுபோல் வெறி பிடித்தவனை ஆண்டவன் வெறுத்து விடுவான்.

மாத்ஸர்யம்: மனதில் பொறாமையை நிலைநிறுத்தி வாழ்பவனுக்கு வேறு பகையே வேண்டாம். அதுவே அவனை அழித்து விடும்.

டம்பம் (வீண் பெருமை): அசுர குணமானது நமக்குள் இருக்கக் கூடாது.

அகந்தை: தான் என்ற அகந்தை கொண்டவன் ஒரு போதும் வாழ்வில் முன்னேற முடியாது. அகந்தை என்பது முடிவில்லா ஒரு சோக சுமை.

சாத்வீகம்: விருப்பு, வெறுப்பு இன்றி கர்மம் செய்தல் வேண்டும்.

ராஜஸம்: அகங்காரத்தோடு கருமம் செய்தல் கூடாது

தாமஸம்: அற்ப புத்தியை பற்றி நிற்பது. மதி மயக்கத்தால் வினை செய்வது

ஞானம்: எல்லாம் ஆண்டவன் செயல் என்று அறியும் பேரறிவு

அஞ்ஞானம்: உண்மைப் பொருளை அறிய மாட்டாது மூடி நிற்கும் இருள்

கண்: ஆண்டவனை தரிசித்து ஆனந்தம் அடைய வேண்டும்.

காது: ஆண்டவனின் மேலான குணங்களைக்கேட்டு, அந்த ஆனந்த கடலில் மூழ்கவேண்டும்.

மூக்கு: ஆண்டவனின் சன்னிதியில் இருந்து வரும் நறுமணத்தை நுகர வேண்டும்.

நாக்கு: புலால் உணவை தவிர்க்க வேண்டும்.

வாய்: கடுஞ்ச்சொற்கள் பேசக்கூடாது.

மெய்: இரு கரங்களால் இறைவனை கைகூப்பித் தொழ வேண்டும். கால்களால் ஆண்டவன் சன்னிதிக்கு நடந்து செல்லவேண்டும். உடல் பூமியில் படும்படி விழுந்து ஆண்டவனை நமஸ்கரிக்க வேண்டும்.

இந்த பதினெட்டு வித குணங்களில் நல்லவற்றைப் பின்பற்றியும், தீயவற்றை களைந்தும் வாழ்க்கைப் படியில் ஏறிச்சென்றால்தான் இறைவன் அருள் கிடைக்கும். இதையே சபரிமலை தர்மசாஸ்தாவின் பதினெட்டு படிகளும் உணர்த்துகின்றன.

மேலும் செய்திகள்