
Image Courtesy : PTI
மகா கும்பமேளா: திரிவேணி சங்கமத்தில் இதுவரை 11.5 கோடி பேர் புனித நீராடல்

மகா கும்பமேளாவிற்கு இதுவரை சுமார் 11.5 கோடி பேர் வருகை தந்து புனித நீராடியுள்ளனர்.
லக்னோ,
உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த 13-ந்தேதி தொடங்கியது. பிப்ரவரி 26-ந்தேதி வரை 45 நாட்கள் நாட்கள் மகா கும்பமேளா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உள்ளது.
இதற்காக 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 1,800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள், 25 ஆயிரம் தொழிலாளர்கள், 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை அரசு அமைத்துள்ளது.
இந்நிலையில், இன்றைய தினம் வார விடுமுறையையொட்டி கும்பமேளாவிற்கு வருகை தந்த பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதன்படி, கும்பமேளாவின் 14-வது நாளான இன்று 1.25 கோடி பேர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியதாகவும், இதுவரை சுமார் 11.5 கோடி பேர் மகா கும்பமேளாவிற்கு வருகை தந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகா கும்பமேளாவுக்கு இந்த வருடம் 40 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.