ஈஷாவில் 'யக்ஷா' 3-ஆம் நாள் நிறைவு விழா

உலக புகழ் பெற்ற பரதக் கலைஞர் மீனாட்சி ஶ்ரீனிவாசன் நிகழ்த்திய நடன நிகழ்ச்சியால் அரங்கம் ஆர்ப்பரித்தது.
கோவை,
இந்தியாவில் முழுவதும் இன்று (பிப்.26-ம் தேதி) மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இந்த சிவராத்திரியை முன்னிட்டு கோவை ஈஷா யோகா மையத்தில் யக்ஷா கலைத் திருவிழா தொடங்கியது. இந்த திருவிழாவின் முதல் நாள் மற்றும் இரண்டாம் விழா சீறும் சிறப்புமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் நேற்று 3-ம் நாள் விழாவாக இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உலக புகழ் பெற்ற பரதக் கலைஞர் மீனாட்சி ஶ்ரீனிவாசன் நிகழ்த்திய நடன நிகழ்ச்சியால் அரங்கம் ஆர்ப்பரித்தது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட எஸ்.கே சுந்தரராமன், வினு அறம் மற்றும் தரணிபதி ராஜ்குமார் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி விழாவினை துவக்கி வைத்தனர்.
ஈஷா மைய வளாகத்தின் சூர்ய குண்ட மண்டபம் முன்பு நடைபெற்ற மூன்றாம் நாள் நிகழ்ச்சியில் 'பத்ம பூஷன்' அலமேலு வள்ளியின் மாணவியான மீனாட்சி ஶ்ரீனிவாசனின் பரதநாட்டியம் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. பரதநாட்டியத்தில் பந்தநல்லூர் பாணியில் ஆடுவதில் தனித்துவம் பெற்றவர் இவர். இந்நிகழ்ச்சியில் அவருடன் வேதகிருஷ்ணராம், ஜெயஶ்ரீ, ஹரிபிரசாத் உள்ளிட்ட கலைஞர்கள் பங்கேற்று அசத்தினர்.
இந்த இசை நிகழ்ச்சியை நூற்றுக்கணக்கான பொதுமக்களும் ஈஷா தன்னார்வலர்களும் கண்டு ரசித்தனர். கடந்த மூன்று நாட்களாக நடந்து வந்த யக்ஷா கலைத் திருவிழா இந்நிகழ்ச்சியுடன் நிறைவு கண்டது. மேலும் இன்று (பிப் 26) மாலை 6 தொடங்கி இரவு முழுவதும் இசை, நடனம்,
சத்குருவுடன் அருளுரை, சக்திவாய்ந்த தியானங்கள் என மஹாசிவராத்திரிக் கொண்டாட்டங்கள் ஈஷா யோகா மையத்தில் களைகட்ட உள்ளன.
நம் தேசத்தின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் வகையில் பாரத கலாச்சாரத்தில் தோன்றிய பல விதமான கலைவடிவங்கள் இன்று நம்முடைய அன்றாட வாழ்க்கையில் இருந்து மறைந்து போய் வருகின்றன. இந்த கலை வடிவங்களின் தனித்தன்மை, புனிதம் மற்றும் பன்முகத்தன்மையை பாதுகாத்து வளர்ப்பதற்கான ஒரு முயற்சியாக ஈஷா ஒவ்வொரு வருடமும் யக்க்ஷா கலைத் திருவிழாவை நடத்துகிறது. கலை, இசை மற்றும் நடனத்திற்கான மூன்று நாள் திருவிழாவாக யக்ஷா நடைபெறுகிறது. இதில் தேசத்தின் தலைசிறந்த கலைஞர்கள் கலந்துக்கொண்டு கலை நிகழ்ச்சிகளை வழங்கி வருகின்றனர்.